- Home
- Sports
- Sports Cricket
- இப்பவாவது கண்ணு தெரியுதா? இந்திய அணி தேர்வாளர்களை விளாசிய வாஷிங்டன் சுந்தரின் தந்தை!
இப்பவாவது கண்ணு தெரியுதா? இந்திய அணி தேர்வாளர்களை விளாசிய வாஷிங்டன் சுந்தரின் தந்தை!
வாஷிங்டன் சுந்தர் நன்றாக விளையாடியும் இந்திய அணி தேர்வாளர்கள் அணியில் எடுக்க மறுப்பதாக அவரின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.

Washington Sundar father accuses indian team selectors
இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட்டில் சூப்பர் சதம் (101 ரன் நாட் அவுட்) விளாசி இந்திய அணியை தோல்வியில் இருந்து மீட்டு டிரா செய்ய வைத்தவர் வாஷிங்டன் சுந்தர். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணி தேர்வாளர்கள் மீது கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார் அவரது தந்தை எம். சுந்தர். இந்திய அணியில் தனது மகனுக்கு நிலையான வாய்ப்புகள் வழங்கப்படாததில் அவர் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
வாஷிங்டன் சுந்தரின் தந்தை குற்றச்சாட்டு
இது தொர்பாக வாஷிங்டன் சுந்தரின் தந்தை எம். சுந்தர் கூறுகையில், “வாஷிங்டன் தொடர்ந்து சிறப்பாக செயல்படுகிறார். ஆனால், அவரது ஆட்டத்தை யாரும் கவனிப்பதோ, பேசுவதோ இல்லை. மற்ற வீரர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கின்றன.
ஆனால் என் மகனுக்கு அந்த அளவுக்குக் கிடைப்பதில்லை. நான்காவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் செய்தது போல, வாஷிங்டன் ஐந்தாவது இடத்தில் தொடர்ந்து பேட்டிங் செய்ய வேண்டும்.
மேலும், தொடர்ச்சியாக ஐந்து முதல் பத்து போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். முதல் டெஸ்டில் அவரை விளையாட வைக்காதது ஆச்சரியமாக இருக்கிறது. தேர்வாளர்கள் அவரது ஆட்டத்தை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்” என்றார்.
அணியில் இருந்து நீக்கப்படுவார்
2021ல் வாஷிங்டன் சுந்தர் டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து பேசிய எம். சுந்தர், “2021-ல் இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் 85 ரன்களும், அகமதாபாத்தில் 96 ரன்களும் அவர் எடுத்தார். அதுவும் பேட்டிங்கிற்கு சாதகமில்லாத ஆடுகளங்களில். ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்தால் என் மகன் அணியில் இருந்து நீக்கப்படுவார். இது நியாயமில்லை” என்று தெரிவித்தார்.
ஐபிஎல்லிலும் வாய்ப்பு மறுப்பு
மேலும் ஐபிஎல் அணியான குஜராத் டைட்டன்ஸும் வாஷிங்டனுக்கு வாய்ப்பு வழங்காதது குறித்து பேசிய எம்.சுந்தர், ''குஜராத் டைட்டன்ஸ் அவருக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்குவதில்லை. ஐபிஎல் 2023 எலிமினேட்டரில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக 24 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து தனது திறமையை நிரூபித்தார். யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் எப்படி ஆதரவு அளித்தது என்பதைப் பாருங்கள்” என்று கூறினார்.