- Home
- Sports
- Sports Cricket
- டி20 உலகக்கோப்பையில் பரிசு மழை.. அடேங்கப்பா! சாம்பியன் அணிக்கு இத்தனை கோடிகளா? முழு விவரம்!
டி20 உலகக்கோப்பையில் பரிசு மழை.. அடேங்கப்பா! சாம்பியன் அணிக்கு இத்தனை கோடிகளா? முழு விவரம்!
டி20 உலகக்கோப்பை 2026 இறுதிப்போட்டியில் இந்தியாவும், நியூசிலாந்தும் இன்று மோதுகின்றன. டி20 உலகக்கோப்பையின் பரிசுத்தொகை தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

இந்தியா, நியூசிலாந்து இறுதிப்போட்டி
கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தளித்த டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்தியாவும், நியூசிலாந்தும் இன்று (மார்ச் 8) குஜராத் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகின்றன. இந்திய அணி 3வது முறையாக கோப்பையை வெல்லுமா? என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இந்த நிலையில், 2026 டி20 உலகக்கோப்பையில் கோப்பையை வெல்லும் அணிக்கு எவ்வளவு பரிசுத்தொகை கிடைக்கும்? மற்ற அணிகளுக்கு எவ்வளவு கிடைக்கும்? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
டி20 உலகக்கோப்பையில் பரிசு மழை
2026 டி20 உலகக்கோப்பையில் ஒட்டுமொத்தப் பரிசுத் தொகையாக சுமார் 13.5 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ₹120 கோடிக்கு மேல்) ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று இரவு நடக்கும் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை வெல்லும் இந்தியா அல்லது நியூசிலாந்து அணிகளுக்கு 3 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.27.48 கோடி) பரிசுத்தொகை கிடைக்கும். இறுதிப்போட்டியில் தோற்று 2வது இடம் பிடிக்கும் அணிகளுக்கு $1.6 மில்லியன் (₹14.65 கோடி) பரிசுத்தொகையாக கிடைக்கும்.
அரையிறுதியில் வெளியேறிய அணிகளுக்கான பரிசுத்தொகை
அரையிறுதியில் தோற்று வெளியேறிய தென்னப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகளுக்கு தலா $7,90,000 (₹7.24 கோடி) கிடைக்கும். சூப்பர் 8 சுற்றுடன் வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, பாகிஸ்தான், ஜிம்பாப்வே ஆகிய அணிகளுக்கு தலா $3,80,000 (₹3.48 கோடி) கிடைக்கும். குரூப் சுற்றில் வெளியேறிய அணிகளுக்கு $2,50,00 (₹2.29 கோடி) கிடைக்கும்.
லீக் சுற்றில் வெளியேறினாலும் பரிசு உண்டு
2026 டி20 உலகக்கோப்பையில் மொத்தமாக ரூ.120 கோடிகளுக்கு மேல் பரிசுத்தொகை வழங்கப்படும் நிலையில், 2024 டி20 உலகக்கோப்பையை விட இது 20% அதிகம் ஆகும். லீக் சுற்றில் வெளியேறும் அணிகள் கூட வெறும் கையுடன் செல்லாமல் இருக்க, ஒவ்வொரு அணிக்கும் குறைந்தபட்சம் ₹2.29 கோடி வரை பரிசு வழங்கப்படுவது 2026 டி20 உலகக்கோப்பையின் சிறப்பம்சமாகும்.
இந்திய ரசிகர்கள் எதிர்பார்ப்பு
இந்திய அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்று 3வது முறையாக கோப்பையை கையில் ஏந்துமா என ரசிகர்கள் எதிபார்த்து இருக்கின்றனர். இது தொடர்பாக அகமதாபாத்தில் இறுதிப்போட்டியை காண குவிந்த ரசிகர்கள் கூறுகையில், ''உலகக்கோப்பையின் ஒவ்வொரு போட்டியும் முக்கியமானது. உலகக்கோப்பையில் விளையாடுவதற்கு வேறுபட்ட மனநிலை தேவை என்பதால், முதல் போட்டியே முக்கியத்துவம் பெறுகிறது.
நமது பந்துவீச்சு சற்று பலவீனமாக உள்ளது. நம்மிடம் நல்ல பேட்டிங் வரிசை உள்ளது. முதல் போட்டியில் இருந்து இந்தியா சிறப்பாக செயல்படுவதைப் பார்க்கும்போது, நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் எளிதாக வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை ஒவ்வொரு இந்தியருக்கும் உள்ளது'' என்று தெரிவித்தனர்.

