- Home
- Sports
- Sports Cricket
- எவ்ளோ பெரிய பிஸ்தா பெளலரா இருந்தாலும் ஈவு இரக்கம் இல்லாம அடிப்பது எப்படி? வைபவ் சூர்யவன்ஷி சொன்ன ட்ரிக்
எவ்ளோ பெரிய பிஸ்தா பெளலரா இருந்தாலும் ஈவு இரக்கம் இல்லாம அடிப்பது எப்படி? வைபவ் சூர்யவன்ஷி சொன்ன ட்ரிக்
ஐபிஎல் தொடரில் பெளலர்கள் கண்ணில் விரலை விட்டு ஆட்டி வரும் வீரர் என்றால் அது வைபவ் சூர்யவன்ஷி தான். இவரை அவுட் ஆக்க முடியாமல் பெளலர்கள் திணற, அவரோ தன்னுடைய பேட்டிங் ஸ்டைல் பற்றி ஓப்பனாக பேசி உள்ளார்.

Vaibhav Suryavanshi Says about Fearless Batting
இளம் கிரிக்கெட் வீரர் வைபவ், பும்ரா போன்ற பெரிய பௌலர்களை எல்லாம் அசால்ட்டாக எதிர்கொண்டு, வெறும் 15 பந்துகளில் அரைசதம் அடித்து மிரட்டியுள்ளார். போட்டிக்கு பிறகும் கொண்டாட்டத்தை விட ஒழுக்கத்திற்கே முக்கியத்துவம் கொடுத்த அவரது பேட்டி, பலரையும் கவர்ந்துள்ளது. "பேட்டிங் செய்யும்போது பௌலர் யார் என்பது மனதின் ஒரு மூலையில் ஓடும். ஆனால் என் முழு கவனமும் பந்தின் மீதுதான் இருந்தது. பந்தின் வேகம், லைன் ஆகியவற்றைப் பார்த்து, நான் பயிற்சி செய்ததை களத்தில் செயல்படுத்தினேன். என் இயல்பான ஆட்டத்தை ஆடுவதில் மட்டுமே கவனம் செலுத்தினேன்," என்று வைபவ் கூறினார்.
வைபவ் சூர்யவன்ஷி சாதனை
ஆர்.சி.பி கொடுத்த 202 ரன்கள் டார்கெட்டை விரட்டியபோது, வைபவ் வெறும் 26 பந்துகளில் 78 ரன்கள் விளாசினார். இதில் 8 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் அடங்கும். வெறும் 15 பந்துகளில் அரைசதம் கடந்த இவர், ஐபிஎல் வரலாற்றில் அதிவேக அரைசதம் அடித்த மூன்றாவது இந்தியர் என்ற சாதனையை சமன் செய்தார். இதே சீசனில் சி.எஸ்.கே-க்கு எதிராகவும் 15 பந்துகளில் அரைசதம் அடித்திருந்தார்.
வைபவ் சூர்யவன்ஷி பேட்டி
வெற்றிக்குப் பிறகு கேக் வெட்டி கொண்டாடுவீர்களா? என்ற கேள்விக்கு, "இல்லை சார். எங்களுக்கு காலையில் சீக்கிரம் விமானம் இருக்கிறது. அதனால், இன்று சீக்கிரமாக தூங்கி, சீக்கிரமாக கிளம்ப வேண்டும்," என்று கூறி தனது தொழில்முறைப் பண்பை வெளிப்படுத்தினார். "என் அப்பா, என் பயிற்சியாளர், மற்றும் என் வழிகாட்டி ரோஹித் சர் ஆகியோர் எப்போதும் என்னை ஊக்குவிப்பார்கள். 'இது ஒரு நீண்ட பயணம், இது வெறும் ஆரம்பம்தான். வேறு எதிலும் கவனம் செலுத்தாமல், உன் வேலையில் மட்டும் கவனம் வை' என்று அவர்கள் சொல்வார்கள்," என 15 வயதான வைபவ் கூறினார்.
வைபவின் இந்த எளிமையான மற்றும் தெளிவான பேச்சு, சமூக வலைதளங்களில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. இவ்வளவு இளம் வயதில், ஸ்டார் பௌலர்களை அசால்ட்டாக எதிர்கொண்ட தைரியமும், போட்டிக்குப் பிறகான அவரது பணிவும் ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளது.
அதிக ரன்கள்
ஐபிஎல் தொடரில் ஆரஞ்சு தொப்பிக்கான போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி, இப்போது ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றி அசத்தியுள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக நடந்த போட்டியில், வெறும் 26 பந்துகளில் 78 ரன்கள் விளாசி, மொத்தமாக 4 போட்டிகளில் 200 ரன்களுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இதன் மூலம், தனது சக அணி வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வாலை (183 ரன்கள்) இரண்டாம் இடத்திற்கு தள்ளி, வைபவ் முதலிடத்தை பிடித்துள்ளார்.
18 பவுண்டரி; 18 சிக்ஸர்
இதுவரை ஆடியுள்ள நான்கு போட்டிகளில் 18 பவுண்டரிகள் மற்றும் 18 சிக்ஸர்களை பறக்கவிட்டுள்ளார் வைபவ். இவரது பேட்டிங் சராசரி 50 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 266.67 ஆகவும் உள்ளது. ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் 15 பந்துகளில் அரைசதம் அடித்த இவர், இந்த சீசனில் தனது இரண்டாவது அரைசதத்தை பதிவு செய்தார். முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராகவும் 15 பந்துகளில் அரைசதம் அடித்திருந்தார். இந்தப் பட்டியலில், 176 ரன்களுடன் ராஜஸ்தான் வீரர் த்ருவ் ஜுரெல் மூன்றாவது இடத்தில் உள்ளார். இவர் ஆர்சிபிக்கு எதிராக 43 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெற வைத்தார்.

