- Home
- Sports
- Sports Cricket
- IPL கோப்பை வெல்லாவிட்டால் மரியாதை கிடைக்காது.. ரிஷப் பண்ட்க்கு செக் வைத்த LSG ஓனர்!
IPL கோப்பை வெல்லாவிட்டால் மரியாதை கிடைக்காது.. ரிஷப் பண்ட்க்கு செக் வைத்த LSG ஓனர்!
கடந்த சீசனில் எங்களிடம் ஒரு வலுவான பந்துவீச்சு யூனிட் இல்லை என்பதை நாங்கள் உணர்ந்தோம் என்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா தெரிவித்துள்ளார்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, 2026 ஐபிஎல் சீசனை எதிர்நோக்கி சில முக்கியமான விஷயங்களைப் பேசியுள்ளார். பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுவது மட்டுமே ஒரு அணிக்கு உண்மையான மரியாதையைக் கொடுக்காது என்றும், கோப்பையை வெல்வதுதான் முக்கியம் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
கோப்பை வெல்லும் வரை மரியாதை இல்லை
இது தொடர்பாக ஜியோஸ்டாரில் பேசிய அவர் "ஒரு அணிக்கு உண்மையான அடையாளம் என்பது படிப்படியாகத்தான் உருவாகும். நீங்கள் கோப்பையை வெல்லும் வரை, அதற்கான மரியாதையோ அல்லது ரசிகர்களின் முழுமையான அன்போ கிடைக்காது. ஆமாம், நாங்கள் இரண்டு முறை பிளேஆஃப் சுற்றுக்குச் சென்றிருக்கிறோம், ஆனால் அது நிச்சயம் போதாது. நாங்கள் சில போட்டிகளில் ஜெயிக்கிறோம். சிலவற்றில் தோற்கிறோம். ஆனால், நாங்கள் எங்கள் முதல் கோப்பையை வென்றே ஆக வேண்டும்" என்றார்.
நாங்கள் எடுத்த துணிச்சலான முடிவு
2025 ஐபிஎல் சீசனில் முக்கிய பந்துவீச்சாளர்களுக்குக் காயம் ஏற்பட்டபோதிலும், முதல் ஆறு போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்றது ஒரு பாசிட்டிவ்வான விஷயம் என்றும் கோயங்கா குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், "எய்டன் மார்க்ரம் (13 போட்டிகளில் 445 ரன்கள்), மிட்செல் மார்ஷ் (13 போட்டிகளில் 627 ரன்கள்) ஆகியோரை தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறக்கியது ஒரு துணிச்சலான முடிவு. அது அவர்கள் இருவருக்குமே சிறந்த ஐபிஎல் சீசனாக அமைந்தது. அதேபோல, புதுமுக வீரரான திக்வேஷ் ரதி, 13 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை எடுத்து, எங்கள் அணிக்காக அதிக விக்கெட் எடுத்த வீரராக உருவெடுத்தார்.
அணி திருப்தியளிக்கிறது
இருப்பினும், கடந்த சீசனில் எங்களிடம் ஒரு வலுவான பந்துவீச்சு யூனிட் இல்லை என்பதை நாங்கள் உணர்ந்தோம். அதனால் இந்த முறை, உள்நாட்டு இந்திய பந்துவீச்சாளர்களை வைத்து ஒரு வலுவான பந்துவீச்சுப் படையை உருவாக்கியிருக்கிறோம். இப்போது எங்களிடம் உள்ள அணி திருப்தியளிக்கிறது," என்றார்.
ஒரு வீரரை மட்டும் சார்ந்திருக்க கூடாது
2026 ஐபிஎல் சீசனுக்கான தங்கள் அணியில் தேவையான அனைத்தும் இருப்பதாகவும், இனி தனிப்பட்ட வீரர்களின் திறமையை மட்டும் நம்பாமல், ஒரு அணியாகச் சேர்ந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். "எப்போதும் முன்னேற வாய்ப்பு இருக்கிறது. ஆனால், தற்போதைய எங்கள் அணியில் தேவையான அனைத்தும் உள்ளது. இனி தனிப்பட்ட வீரர்களின் செயல்பாட்டை விட, ஒரு அணியாகச் சேர்ந்து செயல்படுவதுதான் முக்கியம். கடந்த ஆண்டு, தனிப்பட்ட வீரர்கள் பலர் சிறப்பாகச் செயல்பட்டனர். ஆனால் இந்த ஆண்டு, நாங்கள் ஒரு அணியாக வெல்ல விரும்புகிறோம்'' என்று தெரிவித்தார்.

