ghee rice : பாய் வீட்டு நெய் சோறு...இந்த சுவையில் சாப்பிடிருக்கீங்களா?
பாய் வீட்டு பிரியாணிக்கு இணையாக முஸ்லீம் வீட்டு விசேஷங்களில் செய்யப்படும் நெய் சோறின் சுவை வேற லெவல்! தேங்காய் சாதம், பிரியாணி, நெய் சோறு கலந்த இந்த புதுவிதமான சுவையான முஸ்லீம் ஸ்டைல் நெய் சோறு செய்வது எப்படி என விரிவாகப் பாருங்கள்!

பாய் வீட்டு நெய் சோறு: ரகசிய செய்முறை டிப்ஸ்
பாய் வீட்டு நெய் சோறு என்பது வெறும் நெய்யை சாதத்துடன் கலந்து கொடுப்பது கிடையாது. பிரியாணி ஸ்டைலில் செய்யப்படும் இது ஒரு தனித்துவமான உணவாகும். முகலாய மற்றும் நவாபிய சமையல் பாரம்பரியத்தின் தாக்கத்தால் உருவான இந்த நெய் சோறு, பாய் வீட்டு திருமணங்கள் மற்றும் விசேஷங்களில் தவிர்க்க முடியாத முதன்மை உணவாகும். இதன் தனித்துவமான நறுமணமும், நாவில் கரையும் மென்மையான சுவையும் வேறு எந்த நெய் சோற்றிலும் கிடைக்காது. பிரியாணியில் சேர்க்கப்படும் மசாலா சுவை, மணம், காரம் பிடிக்காது என்பவர்கள் இந்த நெய் சோற்றை டிரை பண்ணி பார்க்கலாம். நெய் சோறு சாப்பிட பாய் வீட்டிற்கோ அல்லது ரெஸ்டாரன்டிற்கோ செல்ல வேண்டிய தேவையில்லை. வீட்டிலேயே அதே பாரம்பரிய பாய் வீட்டு சுவையில், சுலபமாகவும் சுவையாகவும் நெய் சோறு எப்படி செய்வது என்ற ரகசிய டிப்சை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
சரியான அரிசித் தேர்வு :
பாய் வீட்டு நெய் சோற்றிற்குச் சீரகச் சம்பா அரிசியே மிகச் சிறந்தது. இதிலிருந்து வரும் இயல்பான நறுமணம் நெய்யோடு சேரும் போது சுவையை இரட்டிப்பாக்கும். அரிசியை 20 நிமிடங்கள் மட்டுமே ஊறவைக்க வேண்டும்; அதிக நேரம் ஊறினால் குழைந்துவிடும்.
நறுமணப் பொருட்களின் தாளிப்பு :
அகலமான பாத்திரத்தில் பசு நெய் மற்றும் சிறிதளவு எண்ணெய் கலந்து சூடாக்க வேண்டும். அதில் பட்டை, ஏலக்காய், கிராம்பு மற்றும் அன்னாசிப்பூ ஆகியவற்றைச் சேர்த்து, மிதமான தீயில் நறுமணம் வரும் வரை தாளிக்க வேண்டும். நறுமணப் பொருட்கள் கருகிவிடக் கூடாது.
வெங்காயத்தின் பதம் :
மெலிதாக நறுக்கிய பெரிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்குவது தான் நெய் சோற்றிற்கு அழகிய நிறத்தையும் லேசான இனிப்புச் சுவையையும் தரும். வெங்காயம் நன்றாகச் சுருங்கி வதங்கும் வரை பொறுமை அவசியம்.
புதினா - கொத்தமல்லி - பச்சை மிளகாய் :
இஞ்சி-பூண்டு விழுது பச்சை வாசனை போக வதங்கியதும், காரத்திற்கு ஏற்ப கீறிய பச்சை மிளகாய், கைநிறைய புதிய புதினா மற்றும் கொத்தமல்லித் தழைகளைச் சேர்க்க வேண்டும். இது சோற்றிற்குத் தனித்துவமான பாய் வீட்டு மணத்தை அளிக்கும்.
தேங்காய்ப்பால் மற்றும் தண்ணீரின் அளவு :
ஒரு பங்கு அரிசிக்கு ஒன்றரை பங்கு தண்ணீர் (ஒரு பங்கு கெட்டியான தேங்காய்ப்பால் + அரை பங்கு தண்ணீர்) என்பது சரியான அளவு. தேங்காய்ப்பால் சேர்ப்பது சோற்றை மிகவும் மென்மையாகவும், சுவையாகவும் மாற்றும்.
'தம்' போடும் முறை :
அரிசியும் தண்ணீரும் சம அளவுக்கு வந்து நீர் வற்றத் தொடங்கும் போது, அடுப்பை மிகக் குறைந்த தீயில் வைத்து மூடி போட்டு, மேலே கனமான பாத்திரத்தை வைக்க வேண்டும். 15 நிமிடங்கள் 'தம்'மில் வைத்திருந்து அடுப்பை அணைத்தால், உதிரி உதிரியாக, மணமணக்கும் பாய் வீட்டு நெய் சோறு தயார்!
பரிமாறும் முறை :
சிக்கன் கிரேவி, மட்டன் சுக்கா, பெப்பர் சிக்கன் போன்றவை இந்த நெய் சோறுக்கு பெஸ்டான காம்போவாக இருக்கும். அசைவம் பிடிக்காதவர்கள் வெங்காயம் ரைத்தா, வெள்ளரிக்காய் ரைத்தா, உருளைக்கிழங்கு ஃபிரை ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

