- Home
- Lifestyle
- மாத்திரைகள் இன்றி நிம்மதியான உறக்கம் பெற 6 எளிய வாழ்வியல் மாற்றங்கள்: புதிய ஆய்வுத் தகவல்!
மாத்திரைகள் இன்றி நிம்மதியான உறக்கம் பெற 6 எளிய வாழ்வியல் மாற்றங்கள்: புதிய ஆய்வுத் தகவல்!
இன்றைய அவசர உலகில் மன அழுத்தம், தவறான உணவால் பலருக்குத் தூக்கம் கெடுகிறது. உடனே மாத்திரைகளைத் தேடாமல், நம் அன்றாட வாழ்க்கைமுறையைச் சற்றே மாற்றுவதன் மூலம் நல்ல தூக்கத்தைப் பெறலாம் என ஆய்வுகள் சொல்கின்றன. அதற்கான 6 எளிய வழிகள் இதோ:

குறிப்பிட்ட நேரத்தில் விழித்தெழும் வழக்கம்:
இரவு எத்தனை மணிக்கு தூங்கச் சென்றாலும், தினமும் காலையில் ஒரே குறிப்பிட்ட நேரத்தில் விழித்தெழுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இது வார இறுதி நாட்களுக்கும் பொருந்தும். இது உடலின் உள்கடிகாரமான 'சிர்காடியன் ரிதம்' (Circadian Rhythm) சுழற்சியைச் சீரமைத்து, இரவு நேரத்தில் தானாகவே தூக்கம் வர வழிவகுக்கும்.
உடற்பயிற்சி மற்றும் உடல் உழைப்பு:
தினமும் தகுந்த உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி மேற்கொள்வது உடலின் அழுத்தத்தைக் குறைக்கும். ஆனால், தூங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பாக கடுமையான உடற்பயிற்சிகள் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
மதிய நேரத் தூக்கத்தைக் குறைத்தல் :
பகலில் நீண்ட நேரம் (1 மணி நேரத்திற்கும் மேலாக) தூங்குவது இரவு நேரத் தூக்கத்தைப் பெரிய அளவில் பாதிக்கும். பகலில் சோர்வாக இருந்தால், மதிய உணவுக்குப் பின் 20 முதல் 30 நிமிடங்களுக்கு மிகாமல் ஒரு சிறிய குட்டித் தூக்கம் (Power nap) போடலாம். இது உடலுக்குப் புத்துணர்ச்சி தருவதோடு, இரவுத் தூக்கத்தையும் பாதிக்காது.
மாலை நேரக் காஃபின் பயன்பாட்டைத் தவிர்த்தல்:
காபி, தேநீர் மற்றும் சில குளிர்பானங்களில் உள்ள 'காஃபின்' (Caffeine) என்ற வேதிப்பொருள் விழிப்புணர்வைத் தூண்டக்கூடியது. இது உடலில் 6 மணி நேரத்திற்கும் மேலாகத் தங்கியிருக்கும். எனவே, மதியத்திற்குப் பிறகு அல்லது தூங்குவதற்கு 6 மணி நேரத்திற்கு முன்பாக காபி, டீ குடிப்பதைத் தவிர்ப்பது இரவு விரைவாகத் தூக்கம் வர உதவும்.
எளிதில் செரிமானமாகும் இரவு உணவு:
இரவு நேரத்தில் பிரியாணி, பொரித்த உணவுகள் போன்ற கொழுப்பு நிறைந்த மற்றும் காரமான கனமான உணவுகளை உண்பதைத் தவிர்க்க வேண்டும். இவை நெஞ்செரிச்சல் மற்றும் செரிமானக் கோளாறுகளை உண்டாக்கித் தூக்கத்தைக் கெடுக்கும். இரவில் எளிதில் செரிமானமாகும் உணவுகளை, தூங்குவதற்கு 2 அல்லது 3 மணி நேரத்திற்கு முன்பே உட்கொள்வது சிறந்தது.
படுக்கைக்குச் செல்லும் முன் மனதை ஒருமுகப்படுத்துதல்:
நாள் முழுவதும் இருக்கும் வேலைப் பளு மற்றும் கவலைகளுடன் படுக்கைக்குச் செல்லக் கூடாது. தூங்குவதற்கு முன் புத்தகங்கள் வாசிப்பது, மெல்லிசை கேட்பது, அல்லது சில நிமிடங்கள் எளிய மூச்சுப்பயிற்சி (Meditation) செய்வது போன்ற பழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ளலாம். இது மூளையைத் தூக்க நிலைக்குத் தயார்படுத்த உதவும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

