Drinking water: ஒரே மூச்சில் 1 லிட்டர் தண்ணீரா? இந்த ஆபத்தை தெரிஞ்சுக்கோங்க!
Drinking water: தண்ணீர் உடலுக்கு மிகவும் அவசியமானது என்றாலும், அதை ஒரே நேரத்தில் அதிக அளவில் குடிப்பது சரியான பழக்கம் அல்ல; பிரச்சனைகளுக்கு வழிவகுக்கலாம். இதுகுறித்து மருத்துவ ஆய்வுகள் கூறுவதை இந்த தொகுப்பில் காணலாம்.

தண்ணீரை ஒரே மூச்சில் குடிக்கிறீங்களா?
தண்ணீர் குடித்தால் உடலுக்கு நல்லது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆரோக்கியமான ஒருவருக்கு ஒரு நாளைக்கு சுமார் 2 முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படலாம். ஆனால், இது அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்காது. வயது, உடல் எடை, உடல் செயல்பாடு, வெப்பநிலை மற்றும் உடல்நிலையைப் பொறுத்து தண்ணீரின் தேவை மாறுபடும்.
தண்ணீரை எப்படி குடிக்க வேண்டும் ?
நம்மில் சிலர் நாள் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் குடிக்காமல், தாகம் எடுத்தவுடன் 1 லிட்டர் தண்ணீர் பாட்டிலை எடுத்து ஒரே மூச்சில் மடக்கு மடக்கென்று குடித்து காலி செய்துவிடுவார்கள். இப்படி தண்ணீர் குடிப்பது சரியான பழக்கமா? ஒரே நேரத்தில் அதிகமாக தண்ணீர் குடித்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்? கிட்னி பெயிலியர் ஆகுமா? என்பது குறித்து தெளிவாகப் பார்க்கலாம்.
தண்ணீர் குடித்தால் கிட்னி பெயிலியர் ஆகுமா?
சாதாரணமாக தேவையான அளவு தண்ணீர் குடிப்பதால் கிட்னி (Kidney) பெயிலியர் ஆகாது. அவை உடலின் நீர்ச்சத்தை பராமரிக்கதான் உதவுகிறது. ஆனால், ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக தண்ணீரை வேகமாக குடிப்பது ஆபத்தான பிரச்சனை ஏற்படுத்தும்.
ஏனென்றால், நாம் குடிக்கும் தண்ணீரை சிறுநீரகங்கள் (Kidney) வடிகட்டி, தேவையற்ற நீரை சிறுநீராக வெளியேற்றும். ஆனால், ஒரே நேரத்தில் அதிக தண்ணீரை வேகமாக குடித்தால், சிறுநீரகங்களால் அதை உடனடியாக வெளியேற்ற முடியாமல் போகலாம். இதனால் ரத்தத்தில் உள்ள சோடியத்தின் (உப்பு) அளவு மிகவும் குறைந்து “ஹைப்போநாட்ரீமியா” (Hyponatremia) ஏற்படலாம்.
ரத்தத்தில் சோடியம் குறைந்தால் என்ன ஆகும்?
சோடியம் நம்ம உடலில் தண்ணீரின் அளவை சரியான சமநிலையில் வைக்கவும், நரம்பு மற்றும் தசைகள் முறையாக வேலை செய்யவும் உதவுகிறது. ரத்தத்தில் சோடியத்தின் அளவு குறையும் போது, செல்கள் மற்றும் மூளைக்குள் அதிகப்படியான நீர் சென்று வீக்கத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இதன் ஆரம்ப அறிகுறிகளாக தலைவலி, மயக்கம், குமட்டல், வாந்தி, வீக்கம், சோர்வு, குழப்பமான மனநிலை போன்றவை ஏற்படலாம். இந்த நிலை மோசமடைந்தால் தூக்கக் கலக்கம், தசை பிடிப்பு, வலிப்பு, சுயநினைவு குறைதல் போன்ற தீவிர அறிகுறிகளும் ஏற்பட வாய்ப்புள்ளது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
”அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு”
எனவே, ஒரே நேரத்தில் அதிக தண்ணீர் குடிப்பதற்கு பதிலாக, தாகம் மற்றும் உடலின் தேவைக்கேற்ப நாள் முழுவதும் சிறிது சிறிதாக இடைவெளிவிட்டுக் குடிப்பது பாதுகாப்பானதாகும். முக்கியமாக, சிறுநீரக நோய், இதய செயலிழப்பு போன்ற உடல்நலப் பிரச்சனைகள் உள்ளவர்கள் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது குறித்து மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்றுவது நல்லது.
அதிக தண்ணீர் குடித்தால் அதிக நன்மை என்று அர்த்தமல்ல. ”அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” என்ற பழமொழிக்கு ஏற்ப தண்ணீராக இருந்தாலும், ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக வேகமாக குடிப்பதைத் தவிர்த்து, உடலின் தேவைக்கேற்ப எடுத்துக்கொள்வதே பாதுகாப்பானது.
மருத்துவ ஆதாரக் குறிப்பு
இந்த கட்டுரையில் இடம்பெற்றுள்ள அனைத்து தகவல்களும் மருத்துவ ஆய்வுகள் மற்றும் அதிகாரப்பூர்வ மருத்துவ ஆதாரங்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டவை.

