- Home
- உடல்நலம்
- கர்ப்பிணிகள் பாராசிட்டமால் சாப்பிடலாமா? குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்துமா? ஆய்வில் வெளியான அதிர்ச்சி
கர்ப்பிணிகள் பாராசிட்டமால் சாப்பிடலாமா? குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்துமா? ஆய்வில் வெளியான அதிர்ச்சி
கர்ப்பமாக இருக்கும் காலக்கட்டத்தில் தலைவலி, காய்ச்சலின் போது மாத்திரை சாப்பிடுவதாக இருந்தாலும் கர்ப்பிணிகளுக்கு ஒருவித பயம் இருக்கும். குறிப்பாக, பாராசிட்டமால் மாத்திரை சாப்பிட்டால் பிறக்கும் குழந்தைக்கு ஆட்டிசம் பாதிப்பு ஏற்படும் அபாயம்.

புதிய ஆய்வு என்ன சொல்கிறது?
The Lancet Obstetrics, Gynaecology and Women's Health என்ற மருத்துவ இதழில் வெளியான புதிய ஆய்வின்படி, கர்ப்ப காலத்தில் சரியான முறையில் பாராசிட்டமால் எடுத்துக்கொண்டால், குழந்தைகளுக்கு ஆட்டிசம், ADHD அல்லது அறிவுசார் வளர்ச்சி குறைபாடுகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் அதற்கு நேரடித் தொடர்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு மிகவும் பெரியது மற்றும் நம்பகமானது என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த ஆய்வு எப்படி நடத்தப்பட்டது?
இந்த ஆய்விற்காக மொத்தம் 43 மருத்துவ ஆய்வுகளை விஞ்ஞானிகள் பகுப்பாய்வு செய்துள்ளனர். மேலும், ஸ்வீடனில் உள்ள சுமார் 25 லட்சம் குழந்தைகளின் தரவுகளையும் அவர்கள் ஆராய்ந்துள்ளனர். விஞ்ஞானிகள் "சகோதர ஒப்பீடு" (sibling comparison) என்ற முறையைப் பயன்படுத்தினர். அதாவது, ஒரே தாய்க்குப் பிறந்த குழந்தைகளில், ஒரு கர்ப்பத்தில் பாராசிட்டமால் பயன்படுத்தியதையும், மற்றொரு கர்ப்பத்தில் பயன்படுத்தாததையும் ஒப்பிட்டுப் பார்த்தனர். இதன் முடிவில், இரண்டு குழந்தைகளுக்கும் ஆட்டிசம் அல்லது பிற மனநலப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயத்தில் எந்த வித்தியாசமும் இல்லை என்பது தெரிந்தது.
முந்தைய ஆய்வுகளில் இருந்த குழப்பம்
இதற்கு முன் நடந்த சில ஆய்வுகளில், பாராசிட்டமால் பயன்பாட்டிற்கும் ஆட்டிசத்திற்கும் தொடர்பு இருப்பது போல முடிவுகள் வெளிவந்தன. ஆனால், பாராசிட்டமால் எடுத்துக்கொண்ட பெண்களுக்கு ஏற்கெனவே காய்ச்சல், வலி அல்லது தொற்று இருந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் இப்போது விளக்குகிறார்கள். இந்த உடல்நலப் பிரச்சினைகள்தான் குழந்தையின் வளர்ச்சியைப் பாதித்திருக்க வாய்ப்புள்ளது. மேலும், மரபணு காரணிகளும் (Genetic factors) இதில் ஒரு பங்கு வகிக்கின்றன. இந்த காரணங்களால்தான் முன்பு தவறான புரிதல் ஏற்பட்டது.
நிபுணர்கள் கூறுவது என்ன?
மருத்துவ நிபுணர்களின் கருத்துப்படி, கர்ப்பிணிகளுக்குப் பாதுகாப்பான வலி நிவாரணிகளில் பாராசிட்டமால் இப்போதும் முதன்மையானது. உலக சுகாதார அமைப்புகூட (WHO) இதை அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலில் சேர்த்துள்ளது. இது NSAIDs அல்லது ஓபியாய்டு (Opioid) வகை மருந்துகளை விட மிகவும் பாதுகாப்பானது. இருப்பினும், குறைந்த அளவிலும், தேவைப்படும்போது மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
மருந்து எடுக்காவிட்டால் ஆபத்தா?
சில பெண்கள் பயத்தின் காரணமாக மருந்துகளை எடுத்துக்கொள்வதைத் தவிர்க்கிறார்கள். ஆனால், இது இன்னும் ஆபத்தானது. காய்ச்சலைக் கட்டுப்படுத்தாவிட்டால் கருச்சிதைவு, குறைப்பிரசவம் (Preterm Birth), மற்றும் பிறக்கும் குழந்தைக்கு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று சிகிச்சை எடுத்துக்கொள்வது மிகவும் முக்கியம். கர்ப்பிணிகள் உண்மையிலேயே தேவைப்பட்டால் மட்டுமே பாராசிட்டமால் பயன்படுத்த வேண்டும். கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும். சுயமாக அதிக அளவில் எடுத்துக்கொள்ளக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

