வெற்றி உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு! மகன் உடலை மீட்டவர்களுக்கு சொன்னபடி ஒரு கோடி சன்மானம்..!
இமாச்சலின் சட்லஜ் நதியில் 8 நாட்களுக்கு பிறகு சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டத்தை அடுத்து குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
Saidai Duraisamy Son
சென்னை மாநகராட்சி அதிமுக முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் ஒரே மகன் வெற்றி துரைசாமி (45). இவர் கடந்த 4ம் தேதி இமாச்சல பிரதேசத்திற்கு தனது நண்பர் திருப்பூரைச் சேர்ந்த கோபிநாத்துடன் சுற்றுலா சென்றிருந்தார். இமாச்சலின் லாஹஸ் ஸ்பிதி பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் தன்ஜினின் காரில் காசா பகுதியை சுற்றிப் பார்த்த இவர்கள் சிம்லாவுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
Satluj River
அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி 200 அடி பள்ளத்தாக்கில் விழுந்து சட்லஜ் ஆற்றில் கவிழ்ந்தது. இதில், கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கோபிநாத் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால், வெற்றி துரைசாமி குறித்து எந்த தகவலும் இல்லை. ஆகையால் அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. தனது மகன் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ.1 கோடி சன்மானம் வழங்கப்படும் என சைதை துரைசாமி அறிவித்திருந்தார்.
Vetri Duraisamy
இந்நிலையில், கடந்த 8 நாட்களாக அவரை தேடும் பணியில் தேசிய பேரிடம் மீட்பு குழுவினர் மற்றும் ஸ்கூபா டைவிங் செய்யும் நீர்மூழ்கி வீரர்கள் ஈடுபட்டிருந்தனர். முதலில் அவரது உடைமைகள், செல்போன் கைப்பற்றிய நிலையில் 8வது நாளான நேற்று 6 கிலோ மீட்டர் தொலைவில் பாறைக்கு அடியில் சிக்கியிருந்த வெற்றி துரைசாமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது
Vetri Duraisamy body
இதனையடுத்து வெற்றி துரைசாமியின் சடலத்தை மீட்டு சிம்லா இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து வெற்றி துரைசாமியின் உடல், ஏர் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் இன்று சென்னை கொண்டு வரப்படுகிறது. பின்னர் இன்று மாலை 5 மணிக்கு பொது அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 6 மணிக்கு கண்ணம்மாபேட்டை மயான பூமியில் தகனம் செய்யப்படுகிறது.
One crore reward
அவருடைய மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், வெற்றி துரைசாமி உடலை கண்டறிந்த ஸ்கூபா நீச்சல் வீரர்களுக்கு ரூபாய் ஒரு கோடி வழங்கப்படும் என சைதை துரைசாமி தெரிவித்ததாக இமாச்சல பிரதேச போலீசார் தெரிவித்துள்ளனர்.