நவராத்திரி திருவிழா.! பக்தர்களுக்கு பழனி தண்டாயுதபாணி கோயில் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய தகவல்.!
இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா பழனி முருகன் கோயிலில் வருகிற 15-ம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்குகிறது.
முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவில். வெளியூரில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அதேபோல் திருக்கார்த்திகை, கந்தசஷ்டி, நவராத்திரி ஆகிய விழாக்களும் கோயிலில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பழனி முருகன் கோவிலில் விமர்சையாக நடைபெறக்கூடிய விழாக்களில் ஒன்று நவராத்திரி விழா. நவராத்திரி விழா 15ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி 9 நாட்கள் நடைபெற உள்ளது.
இந்த நவராத்திரி விழாவை முன்னிட்டு பழனி முருகன் கோவில் மலை மீது தினமும் நடைபெறக்கூடிய தங்கரத ஓட்டம் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட உள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 15ம் தேதி முதல் 23ம் தேதி வரை தங்க ரத புறப்பாடு நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாகவும், 24ம் தேதி முதல் வழக்கம் போல தங்கரதம் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் மலை மீது நடைபெறக்கூடிய தங்கரத புறப்பாடு நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கரதம் இழுத்து முருகனை வழிபடுவது வழக்கம் என்பது குறிப்பித்தக்கது.