- Home
- Gallery
- கால்ஷீட் கொடுக்க முடியாத அளவுக்கு பிஸி.. டாப் நடிகையாக இருந்த ரம்பா சினிமாவில் இருந்து விலகியது ஏன்?
கால்ஷீட் கொடுக்க முடியாத அளவுக்கு பிஸி.. டாப் நடிகையாக இருந்த ரம்பா சினிமாவில் இருந்து விலகியது ஏன்?
கால்ஷீட் கொடுக்க முடியாத அளவுக்கு டாப் நடிகையாக வலம் வந்த நடிகை ரம்பா திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கினார்.

90கள் மற்றும் 2000களின் முற்பகுதியில் பிரபலமான நடிகைகளில் ரம்பாவும் ஒருவர். குறிப்பாக 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் நடிகைகளில் ஒருவராகவும் நடிகை ரம்பா இருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, ஹிந்தி, போஜ்புரி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்த பிரபலமானார். இவர் தனது திரை வாழ்க்கையில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.
1992-ம் ஆண்டு வெளியான சர்கம் என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அப்போது அவருக்கு வயது 15 மட்டுமே. அவரின் முதல் படமே வெற்றிப்படமாக அமைந்த நிலையில், அடுத்தடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. அதே ஆண்டு தெலுங்கு திரையுலகிலும் என்ட்ரி கொடுத்த அவர் வெற்றி நாயகியாக வலம் வந்தார்.
பின்னர் 1993-ம் ஆண்டு தமிழில் உழவன் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் ரம்பா. இந்த படத்தில் வரும் பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ பாடல் இன்று வரை பிரபலம். எனினும் ரம்பா கதாநாயகியாக அறிமுகமானது சுந்தர் சி இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் வெளியான உள்ளத்தை அள்ளத்தா படத்தில் தான். இதை தொடர்ந்து செங்கோட்டை, சுந்தர புருஷன், நினைத்தேன் வந்தாய், காதலா காதலா, விஐபி, மின்சாரக் கண்ணா உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.
அந்த காலத்தில் தொடையழகி என்றும் அழைக்கப்பட்ட ரம்பா திரையில் அறிமுகமாகி குறுகிய காலத்திலேயே ரஜினி, கமல், விஜய், அஜித், கார்த்திக், அர்ஜுன், பிரசாந்த் என பல முன்னணி நடிகர்களுடனும் நடித்தார். மேலும் மம்முட்டி, சிரஞ்சீவி, நந்தமுரி பாலகிருஷ்ணா, வெங்கடேஷ் மற்றும் மோகன்லால் போன்ற தென்னிந்திய பிரபல நடிகர்களுடன் ரம்பா ஜோடி சேர்ந்தார்.
அதே போல் சல்மான் கானுடன் ஜுட்வா மற்றும் பந்தன் ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் பாலிவுட்டிலும் பிரபலமானார். ஒருக்கட்டத்தில் கால்ஷீட் கொடுக்க முடியாத அளவுக்கு பிஸி நடிகையாக மாறினார் நடிகை ரம்பா.
ஆனால் திரை பிரபலங்கள் பெரும்பாலும் சறுக்கும் இடம் தயாரிப்பு தான். அப்படி தான் தயாரிப்பாளராக வேண்டும் என்று ஆசைப்பட்ட ரம்பா த்ரீ ரோசஸ் என்ற படத்தை தயாரித்தார். ஜோதிகா, லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இந்த படத்தை தனது சகோதரரின் உதவியுடன் தயாரித்து நடித்தார்.
இருப்பினும், இந்த படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை என்பதால் படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது, மேலும் படம் வெளியான பிறகு அவர் கடுமையான கடனின் மூழ்கினார். கடனை அடைப்பதற்காக சென்னை மவுண்ட் ரோட்டில் உள்ள தனது வீட்டை விற்றுவிட்டார்.
எனினும் தமிழில் தொடர்ந்து பல படங்களில் ரம்பா நடித்தாலும் அதற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ரம்பா நடித்து வந்தார். இந்த சூழலில் கனடாவைச் சேர்ந்த தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாதனை திருமணம் செய்ய முடிவு செய்தார். 2010-ம் ஆண்டு திருமணம் செய்த இந்த தம்பதிக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
இதனிடையே ரம்பாவுக்கும் அவரின் கணவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாகவும் இருவரும் விவாகரத்து செய்யப்போவதாகவும் தகவல் பரவியது. ஆனால் அந்த தகவலை ரம்பா மறுத்தார். வெள்ளித்திரையை போலவே சின்னத்திரையிலும் பல நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
2011 ஆம் ஆண்டில், பிலிம்ஸ்டார் என்ற மலையாளத் திரைப்படம் தான் ரம்பாவின் கடைசி படமாக அமைந்தது. தற்போது ரம்பா தனது குடும்பத்துடன் டொராண்டோவில் வசித்து வருகிறார். பொது பார்வையில் இருந்து விலகி இருந்தாலும், சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.