ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சண்ட் பிரம்மாண்ட திருமணம்.. 14 புதிய கோயில்களை கட்டும் அம்பானி குடும்பம்
ஆனந்த்-ராதிகாவின் திருமணத்தை முன்னிட்டு ஜாம்நகரில் 14 கோயில்களை கட்ட அம்பானி குடும்பம் ஏற்பாடு செய்துள்ளது..
இந்தியாவின் பெரும்பணக்காரரும், ரிலையன்ஸ் குழும தலைவருமான முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்செண்ட் என்ற பெண்ணை காதலித்து வந்தார். இவர் பிரபல் தொழிலதிபரான விரேன் மெர்ச்செண்டின் மகள் ஆவார். ஆனந்த் - ராதிகாவுக்கு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்களின் திருமணம் வரும் ஜூலை 12-ம் தேதி நடைபெற உள்ளது.
anant ambani
இந்த சூழலில் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் வரும் மார்ச் 1 முதல் மார்ச் 3 வரை நடைபெற உள்ளன. இதனை பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கொண்டாட அம்பானி குடும்பம் திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள மிகப்பெரிய கோயில் வளாகத்திற்குள் 14 புதிய கோயில்களைக் கட்ட அம்பானி குடும்பத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
நேர்த்தியாக செதுக்கப்பட்ட தூண்கள், தெய்வங்களின் சிற்பங்கள், ஓவியங்கள் தலைமுறைகளின் கலை பாரம்பரியத்தால் ஈர்க்கப்பட்ட கட்டிடக்கலை ஆகியவற்றைக் கொண்ட இந்த கோயில் வளாகம் இந்தியாவின் வளமான கலாச்சார மற்றும் ஆன்மீக அடையாளமாக விளங்குகிறது.
தலைசிறந்த சிற்பிகளால் உயிர்ப்பிக்கப்பட்ட கோயில் கலை, பழமையான நுட்பங்களையும் மரபுகளையும் பறைசாற்றுகிறது. .ரிலையன்ஸ் அறக்கட்டளை நிறுவனர் தலைவர் நீதா அம்பானியின் இந்திய பாரம்பரியம், கலாச்சாரத்தைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் என்ற பார்வைக்கு ஏற்ப, உள்ளூர் கைவினைஞர்களின் திறன்களை சுட்டிக்காட்டும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
மேலும் ஜாம்நகரில் உள்ள மோதிகாவ்டியில் உள்ள கோயில் வளாகத்தில் உள்ளூர்வாசிகள் மற்றும் கைவினைஞர்களுடன் உரையாடிய நீடா அம்பானி, கலைப்படைப்பையும் அவர்களின் அரும்பணிகளையும் பாராட்டினார்.
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய மூன்று நாள் விருந்து ஜாம்நகர் நகரில் மார்ச் 1 முதல் 3 வரை நடைபெற உள்ளது. அனைத்து விருந்தினர்களும் மார்ச் 1 ஆம் தேதி காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை மும்பை அல்லது டெல்லியில் இருந்து தனி விமானங்களில் ஜாம்நகருக்கு செல்ல உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் அமிதாப் பச்சன், ஷாருக்கான், சல்மான் கான், ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைபிரபலங்களும் தொழிலதிபர்களும் பங்கேற்க உள்ளனர். மேலும் சர்வதேச பிரபலங்கள் சிலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, மெட்டா CEO மார்க் ஜுக்கர்பெர்க், மோர்கன் ஸ்டான்லி CEO டெட் பிக், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், டிஸ்னி CEO Bob Iger, BlackRock CEO லாரி ஆகியோர் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.