பல பெண்களுடன் தொடர்பு... சித்ராவை உடல் ரீதியாக துன்புறுத்திய ஹேமந்த்... நீதிமன்றத்தில் தாக்கலான திடீர் மனு!
தன்னை பெரிய தொழிலதிபர் போல், அரசியல்வாதிகள், அதிகாரிகளுடன் நெருக்கமானவர் எனக் காட்டிக் கொண்டு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வார் என்றும் அதே போல தான் சித்ராவுடனும் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முல்லையாக நடித்ததன் மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமான விஜே சித்ரா டிசம்பர் 9ம் தேதி பூந்தமல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவருடைய கணவர் ஹேமந்த் கைது செய்யப்பட்டார். மேலும் ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. திவ்ய ஸ்ரீ சித்ராவின் குடும்பத்தினர், மாமனார், மாமியர், கணவர் ஹேமந்த், சக நடிகர், நடிகைகள், நண்பர்கள், ஓட்டல் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள், சித்துவின் உதவியாளர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
கிட்டதட்ட 15 பேரிடம் நடத்தப்பட்ட 16 பக்க விசாரணை அறிக்கையை கடந்த மாதம் கோட்டாட்சியர் திவ்ய ஸ்ரீ காவல்துறையினரிடம் ஒப்படைத்தார். இதனிடையே சித்ராவின் தாயார் தனது மகளின் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டுமென முதல்வரின் தனிப்பிரிவிற்கு மனு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே 2015ம் ஆண்டு புகார் கொடுக்கப்பட்ட மருத்துவ சீட்டு மோசடி வழக்கில் ஹேமந்த் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து சித்ராவின் மரண வழக்கையும் மத்திய குற்றப்பிரிவிற்கு மாற்றி சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவு பிறப்பித்தார்.
சித்ராவிற்கும் தனக்கும் எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை என்றும், எந்த குற்றமும் செய்யாத தனக்கு ஜாமீன் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சித்ராவின் பெற்றோர் ஏற்கனவே மனு தாக்கல் செய்திருந்தனர்.
அவருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து, ஹேமந்தின் 10 ஆண்டு கால நண்பரான காஞ்சிபுரம் மாவட்டம் புதுப்பாக்கத்தைச் சேர்ந்த சையது ரோஹித் சென்னை உயர் நீதிமன்றத்தில் இடையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில்,ஹேமந்திற்க்கு பல பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு பணம் பறித்து வந்ததாகவும், பல முறை எச்சரித்தும் கேட்காததால் அவரிடம் இருந்து விலகியிருந்ததாகவும் கூறியுள்ளார்.
தன்னை பெரிய தொழிலதிபர் போல், அரசியல்வாதிகள், அதிகாரிகளுடன் நெருக்கமானவர் எனக் காட்டிக் கொண்டு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வார் என்றும் அதே போல தான் சித்ராவுடனும் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.
சித்ராவின் நடத்தை மீது சந்தேகம் கொண்டு, அவரை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தியதாகவும், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சக நடிகருடன் நடனமாடியது குறித்து இருவருக்கும் இடையில் சண்டை நீடித்து வந்ததாகவும், அனைத்து தகவல்களும் தெரிந்த தன்னை இதுவரை போலீசார் விசாரணைக்கு அழைக்கவில்லை என்றும் மனுவில் கூறியுள்ளார்.
ஹேமந்தின் ஜாமீன் மனு நீதிபதி பாரதிதாசன் முன் விசாரணைக்கு வந்த போது, பதில்மனு தாக்கல் செய்ய போலீஸ் தரப்பில் கால அவகாசம் கோரியதை அடுத்து, வழக்கின் விசாரணை ஜனவரி 21ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.