- Home
- Cinema
- Bharathiraja : வீட்டையே அடகு வச்சு பாரதிராஜா எடுத்த படம்... பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்த கதை தெரியுமா?
Bharathiraja : வீட்டையே அடகு வச்சு பாரதிராஜா எடுத்த படம்... பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்த கதை தெரியுமா?
Bharathiraja Movie Secret : இயக்குநர் இமயம் பாரதிராஜா இன்று உடல்நலக்குறைவால் காலமான நிலையில், அவரின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Bharathiraja Movie Secret
தமிழ் சினிமா வரலாற்றில் காலத்தால் அழியாத படைப்புகளில் ஒன்றாக திகழ்கிறது முதல் மரியாதை. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வழக்கமான நடிப்பு பாணியிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு பரிமாணத்தை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய இந்த திரைப்படம், இயக்குநர் பாரதிராஜாவின் கலைத்துணிச்சலின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது.
1985-ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் விமர்சகர்களின் பாராட்டையும், ரசிகர்களின் பேராதரவையும் பெற்று வசூலிலும் சாதனை படைத்தது. சிறந்த வட்டார மொழித் திரைப்படம் உள்ளிட்ட இரண்டு தேசிய விருதுகளை வென்ற இந்த படத்தில், இசைஞானி இளையராஜாவின் இசையும் மிகப்பெரிய பலமாக அமைந்தது.
BharathiRaja: மண்ணின் மணத்தை உலகம் அறியச் செய்த மனிதர்... காற்றில் கரைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜா
வீட்டை விற்று படம் எடுத்த பாரதிராஜா
இந்த படத்தின் கதையை எழுதியவர் எழுத்தாளர் ஆர்.செல்வராஜ். பாரதிராஜாவின் பல முக்கிய திரைப்படங்களுக்கு கதாசிரியராக பணியாற்றிய அவர், தமிழ் சினிமாவின் பல கிளாசிக் படைப்புகளுக்கு பின்னணியாக இருந்தவர். அன்னக்கிளி முதல் புதுமைப்பெண் வரை பல வெற்றிப்படங்களில் அவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
அந்த காலகட்டத்தில் சில படங்களின் தோல்வியால் சவாலான சூழ்நிலையை எதிர்கொண்டிருந்த பாரதிராஜா, சொந்தமாக திரைப்படம் தயாரிக்க முடிவு செய்தார். அதற்காக சென்னை தி.நகரில் இருந்த தனது வீட்டையே விற்று, கிடைத்த பணத்தை ஒரு சூட்கேஸில் வைத்து நேரடியாக செல்வராஜிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.
படமாகிய உண்மை காதல் கதை
“என் எதிர்காலம் இந்தக் கதையில்தான் இருக்கிறது” என்ற நம்பிக்கையுடன் அவர் அந்த பொறுப்பை கதாசிரியரிடம் ஒப்படைத்தாராம். பல கதைகளை யோசித்தும் திருப்தி அளிக்கும் கதை கிடைக்காத நிலையில், ஒரு பயணத்தின் போது உலகப் புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் தாதாவெஸ்கி என்பவரின் வாழ்க்கை வரலாற்றைப் படித்துள்ளார் செல்வராஜ். வயதில் பெரிய எழுத்தாளருக்கும், அவருக்காக பணியாற்றிய இளம்பெண்ணுக்கும் இடையே மலர்ந்த காதல் மற்றும் பின்னர் நடைபெற்ற திருமணம் குறித்த சம்பவம் அவரை ஆழமாக பாதித்ததாம்.
100 நாட்களில் உருவான முதல் மரியாதை
அந்த உணர்வை மையமாகக் கொண்டு, தமிழ்நாட்டின் கிராமிய வாழ்க்கை பின்னணியில் புதிதாக ஒரு கதையை உருவாக்கினார். அந்தக் கதையை கேட்ட பாரதிராஜாவும் உடனே கவரப்பட்டு படப்பணிகளை தொடங்கியதாக சொல்லப்படுகிறது. சுவாரஸ்யமாக, ஆரம்பத்தில் மலைச்சாமி கதாபாத்திரத்திற்கு நடிகர் ராஜேஷ் பரிசீலிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. பின்னர் அந்த வேடம் சிவாஜி கணேசனிடம் சென்றது. அவரது ஒப்புதலுடன் படப்பிடிப்பு வேகமாக முடிக்கப்பட்டது. பாரதிராஜா முதலீடு செய்ததிலிருந்து வெறும் 100 நாட்களுக்குள் படம் வெளியாகியதும் குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
மக்கள் மனதை வென்ற பாரதிராஜா
மலைச்சாமியாக சிவாஜி கணேசன், குயிலியாக ராதா, பொன்னாத்தாளாக வடிவுக்கரசி ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களில் உயிர் ஊட்டினர். குறிப்பாக சிவாஜியின் அடக்கமான, இயல்பான நடிப்பு ரசிகர்களையும் விமர்சகர்களையும் ஆச்சரியப்படுத்தியது. இளையராஜாவின் இசையில் உருவான பாடல்கள், மலேசியா வாசுதேவனின் குரல், கிராமிய மணம் கமழும் காட்சிகள் என அனைத்தும் இணைந்து முதல் மரியாதையை ஒரு காலத்தால் அழியாத காவியமாக மாற்றின. இன்று வரை அந்தப் படம் மற்றும் மலைச்சாமி கதாபாத்திரம் தமிழ் ரசிகர்களின் நினைவில் தனி இடம் பிடித்திருக்கிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

