- Home
- Cinema
- BharathiRaja: மண்ணின் மணத்தை உலகம் அறியச் செய்த மனிதர்... காற்றில் கரைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜா
BharathiRaja: மண்ணின் மணத்தை உலகம் அறியச் செய்த மனிதர்... காற்றில் கரைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜா
Director Bharathiraja passes away: இயக்குநர் இமயம் பாரதிராஜா என்று அன்போடு அழைக்கப்படும் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா உடல்நலக் குறைவால் இன்று அதிகாலை காலமானார்.

இயக்குநர் இமயம்..
தமிழ் சினிமாவில் கிராமத்து வாழ்க்கையை அதன் இயல்பான அழகோடும் உணர்வோடும் வெள்ளித்திரைக்கு கொண்டு வந்த இயக்குநர்களில் முதன்மையானவர் பாரதிராஜா. “இயக்குநர் இமயம்” என்ற பெருமையை பெற்ற அவர், வெறும் படங்களை மட்டும் இயக்கவில்லை; தமிழர்களின் வாழ்க்கை முறையையும், காதலையும், உறவுகளையும், மண்ணின் மணத்தையும் உலகம் அறியச் செய்தார்.
16 வயதினிலே..
1977-ஆம் ஆண்டு வெளியான 16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் புதிய புரட்சியை ஏற்படுத்திய பாரதிராஜா, அதுவரை ஸ்டூடியோவுக்குள் மட்டுமே இருந்த படப்பிடிப்பை கிராமங்களுக்கும் வயல்வெளிகளுக்கும் கொண்டு சென்றார். அவரது படங்களில் வரும் கதாபாத்திரங்கள், சாதாரண மக்களின் வாழ்க்கையை பிரதிபலித்தன. இதனால் பார்வையாளர்கள் அவரை ஒரு இயக்குநராக மட்டுமல்லாமல், தங்களின் குடும்பத்தில் ஒருவராகவே உணர்ந்தனர்.
பல தலைமுறைகளை கவர்ந்த கிராம பண்பாடு
கிழக்கே போகும் ரயில், அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை, மண் வாசனை, கருத்தம்மா, கிழக்கு சீமையிலே போன்ற திரைப்படங்கள் இன்று வரை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன. குறிப்பாக மனித உறவுகள், தாய்மை, காதல் மற்றும் கிராமத்து பண்பாட்டை அவர் திரையில் பதிவு செய்த விதம் பல தலைமுறைகளையும் கவர்ந்தது.
புதுமுகங்கள் To முன்னணி நட்சத்திரங்கள்
பல நடிகர்கள் மற்றும் நடிகைகளின் திரை வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்தவரும் பாரதிராஜாதான். புதிய திறமைகளை கண்டறிந்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியதில் அவருடைய பங்கு அளவிட முடியாதது. அவரால் அறிமுகமான பலர் பின்னர் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களாக உயர்ந்தனர்.
பாரதிராஜாவின் எளிமை
பாரதிராஜா குறித்து பேசும்போது, அவரது படைப்புகளை மட்டும் நினைவுகூர முடியாது; அவரின் எளிமை, மண்ணோடு கலந்த வாழ்க்கை, தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தின் மீதான அன்பும் நினைவுக்கு வரும். திரைத்துறையில் பல தசாப்தங்களாக பயணித்த அவர், தனது கலை மூலம் எண்ணற்ற ரசிகர்களின் இதயங்களில் நிரந்தர இடம் பிடித்துள்ளார்.
ஒரு இயக்குநராக மட்டுமல்லாமல், தமிழர்களின் வாழ்க்கை உணர்வுகளை கலை வடிவில் பதிவு செய்த வரலாற்று சிறப்புமிக்க படைப்பாளியாக பாரதிராஜா என்றும் நினைவுகூரப்படுவார். அவரது படைப்புகள் வாழும் வரை, தமிழ் மண்ணின் மணமும், கிராமத்து மக்களின் உணர்வுகளும் திரையுலகில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும்.
உடல்நலக் குறைவால் காலமானார்..
இந்த நிலையில் 84 வயதான பாரதிராஜா கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். குறிப்பாக கடந்த ஆண்டு அவரது மகன் மறைவுக்கு பின்னர் மிகுந்த மனவேதனையில் இருந்த அவர் தொடர்ந்து வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே இன்று அதிகாலை சென்னை நீலாங்கரை இல்லத்தில் அவரது உயிர் பிரிந்தது. துயர செய்தி அறிந்த திரை பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கல்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

