அமைச்சர் முன்னிலையில் பதவியேற்பு... சினிமா தயாரிப்பாளர்கள் சங்க நிகழ்ச்சியில் குழப்பம்...!
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பதவியேற்பு விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு பங்கேற்றார்.
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு கடந்த 22ம் தேதி நடைபெற்றது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி, பி.எல். தேனப்பன் ஆகியோர் போட்டியிட்டனர்.
தேர்தலில் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி வாகை சூட, டி.ராஜேந்தர் உள்ளிட்டோர் படுதோல்வி அடைந்தனர். இதனால் வெறுப்பான டி.ராஜேந்தர் தேர்தலில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், அதனால் தான் தனது வெற்றி வாய்ப்பு தட்டிப்பறிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டினார்.
அதுமட்டுமின்றி இன்றைய தினத்தில் தமிழ்நாடு மூவி மேக்கர்ஸ் சங்கம் என்ற பெயரில் புதிய சங்கம் ஒன்றையும் ஆரம்பித்துள்ளார். அதன் செயல்பாடுகளை டிசம்பர் 5ம் தேதி முதல் ஆரம்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் சென்னை கலைவாணர் அரங்கில் 2020-2022ம் ஆண்டுக்கான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.
இதில் முன்னாள் தலைவர் ராம நாராயணனின் மகனும், தேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளருமான முரளியும், அவருடையை அணியை சார்பாக தேர்தலில் வெற்றி பெற்றவர்களும் பங்கேற்றனர்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பதவியேற்பு விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு பங்கேற்றார். அவரது முன்னிலை புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் விழா மேடைக்கு பின்புறம் வைக்கப்பட்டிருந்த பேனரில் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் என்ற பெயர் இடம் பெற்றிருந்தது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
டி.ராஜேந்தர் தமிழ்நாடு மூவி மேக்கர்ஸ் சங்கம் என பெயர் வைத்ததால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பெயரை தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் என மாற்றிவிட்டார்களா? அல்லது பெயரை பிழையாக அச்சிட்டு விட்டார்களா? என்ற குழப்பம் எழுந்துள்ளது.