- Home
- Cinema
- ரெட்ரோ மூலம் கிடைத்த லாபம்; அகரம் பவுண்டேஷனுக்கு ரூ.10 கோடி நன்கொடையாக வாரி வழங்கிய சூர்யா!
ரெட்ரோ மூலம் கிடைத்த லாபம்; அகரம் பவுண்டேஷனுக்கு ரூ.10 கோடி நன்கொடையாக வாரி வழங்கிய சூர்யா!
சூர்யா நடித்த ரெட்ரோ திரைப்படம் வெளியாகி வெற்றிபெற்றுள்ள நிலையில், அதன் லாபத்தில் இருந்து 10 கோடியை அகரம் பவுண்டேஷனுக்கு நன்கொடையாக வழங்கி இருக்கிறார் சூர்யா.

Retro Success Meet :
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த படம் ரெட்ரோ. இப்படம் கடந்த மே 1-ந் தேதி திரைக்கு வந்தது. இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், நாசர், ஜோஜு ஜார்ஜ், ஜெயராம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார். இப்படத்தை 2டி நிறுவனம் சார்பாக சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து தயாரித்து இருந்தனர்.
ரெட்ரோ மூலம் கம்பேக் கொடுத்த சூர்யா
தொடர் தோல்விகளால் துவண்டு இருந்த சூர்யா ரெட்ரோ திரைப்படம் மூலம் தரமான கம்பேக் கொடுத்துள்ளார். இப்படம் ரிலீஸ் ஆன ஐந்து நாட்களிலேயே பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளது. ரெட்ரோ திரைப்படம் ரூ.65 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது. அப்படம் ரிலீஸ் ஆன முதல் வாரத்திலேயே லாபம் ஈட்டி கொடுத்துள்ளது. இதனால் அப்படக்குழுவினர் செம குஷியில் உள்ளனர். அதன் தயாரிப்பாளரும் நடிகருமான சூர்யாவுக்கும் ரெட்ரோ படம் நல்ல லாபத்தை கொடுத்துள்ளது.
ரெட்ரோ சக்சஸ் மீட்
ரெட்ரோ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை படக்குழுவினர் கொண்டாடி உள்ளனர். சென்னையில் நடைபெற்ற ரெட்ரோ திரைப்படத்தின் சக்சஸ் மீட்டில் நடிகர் சூர்யா, இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவுக்கு படத்தின் தயாரிப்பாளரான நடிகர் சூர்யா, தடபுடலாக விருந்து வைத்து அசத்தினார். இந்த விருந்தை மாதம்பட்டி ரங்கராஜ் தான் தயார் செய்திருந்தார்.
அகரம் பவுண்டேஷனுக்கு சூர்யா 10 கோடி நன்கொடை
நடிகர் சூர்யா அகரம் என்கிற அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார். அதன் மூலம் ஏராளமான ஏழை எளிய மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளில் படிக்கிறார்கள். இந்நிலையில், ரெட்ரோ திரைப்படத்தின் மூலம் கிடைத்த லாபத்தில் இருந்து ரூ.10 கோடியை அகரம் அறக்கடளை நன்கொடையாக வழங்கி இருக்கிறார் சூர்யா. அவரின் இந்த செயலுக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன. அகரம் பவுண்டேஷன் மூலம் படித்த ஏராளமான ஏழை எளியோர் இன்று டாக்டராகவும், இன்ஜினியராகவும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.