சென்னையில் நடந்த 80ஸ் ரீயூனியன்... பிரபல நடிகர் ஆப்சென்ட் ஆனதால் வெடித்த சர்ச்சை
80ஸ் நட்சத்திரங்கள் ஆண்டுதோறும் ரீ-யூனியன் நடத்துவது உண்டு, அந்த வகையில், இந்த ஆண்டு சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அனைவரும் ஒன்றுசேர்ந்து கொண்டாடி இருக்கிறார்கள்.

80s Reunion in Chennai
1980களில் ஜொலித்த நட்சத்திரங்கள் அனைவரும் '80'ஸ் ஸ்டார்ஸ் ரீயூனியன்' என்ற பெயரில் ஆண்டுதோறும் சந்தித்து வருகின்றனர். இந்த ஆண்டு சந்திப்பில் மீனா, பாக்கியராஜ், சரத்குமார், ஜாக்கி ஷெராஃப், பிரபு நடிகைகள் ராதா, பூர்ணிமா, நதியா, ரேவதி, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். வழக்கமாக இந்த ரீயூனியனில் சிரஞ்சீவி, வெங்கடேஷ், நாகார்ஜுனா போன்ற தெலுங்கு நடிகர்கள் கலந்துகொள்வார்கள். ஆரம்பத்தில் பாலகிருஷ்ணாவும் கலந்துகொண்டார். ஆனால் சமீபகாலமாக அவர் பங்கேற்பதில்லை. இதுவே தற்போது சஸ்பென்ஸாக மாறியுள்ளது.
அதிருப்தியில் பாலகிருஷ்ணா?
பாலகிருஷ்ணா வெளிப்படையாகப் பேசக்கூடியவர் என்பதால், மற்றவர்களுக்கு சங்கடம் ஏற்படலாம். அதனால் அவரை அழைப்பதில்லை என சிலரும், அழைத்தாலும் அவர் வரமாட்டார் என சிலரும் கருத்து தெரிவிக்கின்றனர். 2019ல் சிரஞ்சீவி வீட்டில் நடந்த ரீயூனியனுக்கு தனக்கு அழைப்பு வரவில்லை என பாலகிருஷ்ணா ஒரு பேட்டியில் கூறியிருந்தார். சிரஞ்சீவி வேண்டுமென்றே தன்னை அழைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஆப்செண்ட் ஆன பாலகிருஷ்ணா
தற்போது பாலகிருஷ்ணா, போயபதி சீனு இயக்கத்தில் 'அகண்டா 2' படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாக உள்ளது. இதை தொடர்ந்து கோபிசந்த் மலினேனி இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கிறார். ஷூட்டிங்கில் பிசியாக இருப்பதால் அவரால் 80ஸ் ரீயூனியனில் கலந்துகொள்ள முடியாமல் போயிருக்கும் என சிலர் கூறினாலும், அவர் ஆப்செண்ட் ஆனது சமூக வலைதளங்களில் பேசு பொருள் ஆகி உள்ளது. இந்த ரீயூனியன் சென்னையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
ரஜினியும் இல்லை
அதேபோல் 80ஸில் சூப்பர்ஸ்டாராக ஜொலித்த ரஜினிகாந்தும் இந்த ரீ-யூனியனில் கலந்துகொள்ளவில்லை. அவர் அனைத்து நடிகர், நடிகைகளுடனும் நட்புடன் பழகினாலும், இந்த ரீ யூனியனில் கலந்துகொள்ளாததற்கு முக்கிய காரணம், அவர் தற்போது சென்னையிலேயே இல்லை. அவர் ஆன்மீக சுற்றுலாவாக இமயமலை சென்றிருக்கிறார். வழக்கமாக தன் பட ரிலீசுக்கு முன் இமயமலை செல்வார். ஆனால் இந்த ஆண்டு கூலி பட ரிலீசின் போது செல்ல முடியாததால் தற்போது அங்கு சென்றிருக்கிறார்.