'இனி இந்த குடும்பம் என்னுடையது'..! 4 பெண் குழந்தைகளை தத்தெடுத்த சோனு சூட்! குவியும் வாழ்த்து...
நடிகர் சோனு சூட், உத்தரகாண்ட் வெள்ளத்தில் உயிரிழந்தவரின்... 4 மகள்கள், படிப்பு செலவு மற்றும் வாழ்வாதாரத்திற்கு தேவையான உதவிகளை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.
நடிகர் சோனு சூட் ரசிகர்களால் வில்லனாக பார்க்கப்பட்ட ஒரு நடிகர். ஆனால் தற்போது இவர் தான் ரியல் ஹீரோவாக ரசிகர்களாலும், மக்களாலும் பார்க்கப்பட்டு வருகிறார்.
காரணம் கொரோனா அச்சுறுத்தலின் போது, அனைத்து திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகர்கள் பலரும், குறிப்பிட்ட ஒரு தொகை, மற்றும் தங்களால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்து விட்டு நகர்ந்து விட்ட நிலையில், தில்லாக களத்தில் இறங்கி மக்களுக்கு உதவினார் சோனு சூட்.
தன்னுடைய சொந்த பணத்தில், சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்த புலம் பெயர் தொழிலாளர்கள் பலரை, தன்னுடைய செலவிலேயே பஸ், கார், பிளைட் போன்றவற்றின் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைத்தார்.
இதை தொடர்ந்தும், தன்னால் முடிந்த அளவிற்கு ரசிகர்கள் மற்றும் மக்கள் கேட்கும் உதவிகளை செய்து வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் தன்னுடைய நான்கு பிள்ளைகள் மற்றும் குடும்பத்தை காப்பாற்றி வந்த எலக்ட்ரீசியன் ஒருவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார்.
இவரது வருமானமே அந்த ஒட்டு மொத்த குடும்பத்தையும் காப்பாற்றி வந்த நிலையில், இவரது மனைவி மற்றும் நான்கு பெண் குழந்தைகளும் குடும்பத் தலைவர் ஆலம் சிங் புண்டிர் என்பவரை இழந்து தவித்தனர்.
அவர்களுக்கு உதவி செய்யுமாறு பலர் சோனு சூட்டுக்கு கோரிக்கைகளை வைத்த நிலையில், இதை ஏற்றுக்கொண்ட அவர் அவரது 4 மகள்கள் படிப்பு செலவு மற்றும் வாழ்வாதாரத்திற்கு தேவையான உதவிகளை செய்வதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் இனி இந்த குடும்பம் என்னுடையது என்று பதிவு செய்துள்ளது, அவர் அந்த நான்கு பெண் குழந்தைகளையும் தத்தெடுத்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது. இவரது பதிவுக்கு ரசிகர்கள் மத்தியில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.