பாஜகவில் இணைய முடிவெடுத்த சிவாஜி மகன், பேரன்?... ரகசிய ஆலோசனையால் பரபரப்பு...!
தற்போது சிவாஜி கணேசனின் மூத்த மகனான ராம்குமார், தன்னுடைய மகன் துஷ்யந்துடன் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவில் இவருக்கு நிகர் இவர் மட்டுமே என நடிப்பில் உச்சம் தொட்டவர் நடிகர் திலகம் சிவாஜிகணேஷன். தனிப்பட்டமுறையில் என்ன தான் கலைஞர் கருணாநிதியின் உயிர் நண்பராக இருந்தாலும், கொள்கை ரீதியாக காங்கிரஸ் கட்சி மீது அளவில்லாத பற்று கொண்டவர்.
இந்திராகாந்தி, காமராஜர் போன்றோர் தலையில் காங்கிரஸ் கட்சியில் தீவிரமாக பணியாற்றிவர். ஆனால் அவர்களது மறைவிற்கு பிறகு கட்சியில் முக்கியத்துவம் கிடைக்கவில்லை எனக்கூறி, தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியைத் தொடங்கினார். அந்த கட்சி சார்பில் அதிமுக ஜானகி கூட்டணியுடன் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
அதன் பின்னர் வி.பி.சிங்கின் ஜனதா தளம் கட்சியில் இணைந்து மாநிலத் தலைவராக செயல்பட்டார். அதன் பின்னர் அரசியலில் இருந்து நிரந்தர ஓய்வு பெற்றார். சிவாஜியின் மறைவுக்குப் பிறகு அவருடைய வாரிசுகள் பெரிதாக அரசியல் செயல்பாடுகளில் ஆர்வம் காட்டவில்லை.
தற்போது சிவாஜி கணேசனின் மூத்த மகனான ராம்குமார், தன்னுடைய மகன் துஷ்யந்துடன் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக மதுரையைச் சேர்ந்த பாஜக முக்கிய நிர்வாகியுடன் ஆலோசனை நடத்துள்ளதாகவும், நாளை பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் முன்னிலையில் கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.