கமல், ஷங்கருக்கு சம்பளம் இல்லை; இந்தியன் 3 பஞ்சாயத்தை தீர்த்துவைத்த பிரபலம்!
கமல்ஹாசனின் இந்தியன் 3 படம் கிடப்பில் போடப்பட்டு இருந்த நிலையில், அப்படம் குறித்த குட் நியூஸ் ஒன்று வெளியாகி உள்ளது.

Indian 3 Movie Update
கமல்ஹாசன் நடிப்பில் 1996-ம் ஆண்டு வெளியான பிளாக்பஸ்டர் ஹிட் படம் இந்தியன். இப்படத்தை ஷங்கர் இயக்கி இருந்தார். இப்படத்திற்காக நடிகர் கமல்ஹாசனுக்கு தேசிய விருதும் கிடைத்தது. தமிழ் சினிமாவின் முதல் பான் இந்தியா ஹிட் படமாகவும் இந்தியன் இருந்தது. இதனிடையே, இப்படம் ரிலீஸ் ஆகி 20 ஆண்டுகளுக்கு பின்னர் அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாக அறிவித்தார் கமல்ஹாசன். 2017-ம் ஆண்டே இந்தியன் 2 படம் குறித்த அறிவிப்புகள் வெளிவந்தன. பின்னர் அப்படத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக அதன் ஷூட்டிங் முடிவடைந்து ரிலீஸ் ஆக 7 ஆண்டுகள் ஆனது.
பிளாப் ஆன இந்தியன் 2
இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் என்பதால் அப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பை துளி அளவு கூட அப்படத்தால் பூர்த்தி செய்ய முடியவில்லை. இயக்குனர் ஷங்கரின் கெரியரில் மிகப்பெரிய தோல்விப் படமாக இந்தியன் 2 மாறியது. அதுமட்டுமின்றி அப்படத்தின் காட்சிகளை நெட்டிசன்கள் சரமாரியாக ட்ரோல் செய்து வந்தனர். பிரம்மாண்டத்தை மட்டும் வைத்தால் படம் ஓடாது என்பதற்கு சிறந்த உதாரணம் இந்த படம் தான் என விமர்சகர்களும் விமர்சித்தனர். இந்தியன் 2 படத்தின் படுதோல்வியால் இந்தியன் 3 படத்துக்கு சிக்கல் ஏற்பட்டது.
இந்தியன் 3 படத்துக்கு என்ன ஆச்சு?
இந்தியன் 2 படத்தை எடுக்கும்போதே அதன் மூன்றாம் பாகத்திற்கான 90 சதவீத காட்சிகளையும் எடுத்துவிட்டனர். இன்னும் ஒரு பாடல் காட்சி மற்றும் ஒரு சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட வேண்டி உள்ளது. இந்தியன் 2 தோல்வியால் இந்தியன் 3 படத்தின் மேற்கொண்ட காட்சிகளை எடுக்காமல் அதை ரிலீஸ் செய்ய லைகா முனைப்பு காட்டியது. மறுபுறம் கமல்ஹாசனும், ஷங்கரும் எஞ்சியுள்ள காட்சிகளின் படப்பிடிப்புக்காக சம்பளம் கேட்டதால், தயாரிப்பு தரப்புக்கும் படக்குழுவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் இந்தியன் 3 படத்தின் பணிகளை கிடப்பில் போட்டு வைத்திருந்தனர்.
மீண்டும் ஸ்டார்ட் ஆகும் இந்தியன் 3
இந்த நிலையில், இந்தியன் 3 படம் குறித்து குட் நியூஸ் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி அப்படத்தின் எஞ்சியுள்ள காட்சிகளை எடுக்க படக்குழு தயாராகி வருகிறதாம். மேலும் எஞ்சியுள்ள படப்பிடிப்பிற்காக ஷங்கரும், கமல்ஹாசனும் சம்பளமே வாங்காமல் பணியாற்ற சம்மதித்துள்ளார்களாம். அவர்களின் இந்த முடிவுக்கு முக்கிய காரணம் ரஜினிகாந்த் என்று கூறப்படுகிறது. அவர் இந்த பிரச்சனையில் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் தான் பிரச்சனைகள் ஓய்ந்து தற்போது படத்தின் வேலைகள் ஆரம்பமாக உள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் ஷங்கர் மற்றும் கமல்ஹாசனுக்கு தரமான கம்பேக் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.