- Home
- Cinema
- Padai thalaivan : பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும் கேப்டன் மகன்.! 5 நாள் முடிவில் 'படை தலைவன்' செய்துள்ள வசூல்
Padai thalaivan : பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும் கேப்டன் மகன்.! 5 நாள் முடிவில் 'படை தலைவன்' செய்துள்ள வசூல்
'படை தலைவன்' படம் 5 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Padai Thalaivan Box Office Collection
மறைந்த முன்னாள் நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான கேப்டன் விஜயகாந்த்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ள திரைப்படம் 'படை தலைவன்'. ‘வால்டர்’, ‘ரேக்ளா’ போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் யு.அன்பு இயக்க, விஜே கம்பைன்ஸ் சார்பில் ஜகநாதன் பரமசிவம் இந்த படத்தை தயாரித்துள்ளார். இப்படம், ஜூன் 13, 2025 அன்று திரையரங்குகளில் வெளியானது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். படம் வெளியாகி 5 நாட்களை கடந்துள்ள நிலையில் படம் இதுவரை செய்துள்ள வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளது. அதுகுறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
‘படை தலைவன்’ படத்தின் கதை
'படை தலைவன்' திரைப்படம் மனிதர்களுக்கும், யானைகளுக்கும் இடையிலான பிணைப்பை மையமாகக் கொண்ட ஒரு உணர்வுப்பூர்வமான ஆக்ஷன் கதையாகும். பொள்ளாச்சி அருகிலுள்ள சேத்துமடை கிராமத்தைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (கஸ்தூரி ராஜா). இவர் தனது மகன் வேலு (சண்முக பாண்டியன்) மற்றும் சகோதரியுடன் வாழ்ந்து வருகிறார். இவர்கள் மணியன் என்ற யானையை வளர்த்து வருகின்றனர். யானையும் அவர்கள் குடும்பத்தில் ஒருவராகவே வளர்ந்து வருகிறது. யானை மணியன் மீது வேலுவின் குடும்பத்தினர் தீராத பாசம் கொண்டுள்ளனர். ஒரு கட்டத்தில், யானை ஒரு கும்பலால் கடத்தப்படுகிறது. யானையை மீட்டெடுக்க வேலுவும், அவரது நண்பர்களும் செல்கின்றனர். யானைக்கக அவர்கள் மேற்கொள்ளும் பயணமும், பயணத்தில் எதிர்கொள்ளும் சவால்களும், யானை கடத்தப்பட்டதற்கான பின்னணியில் உள்ள மர்மங்களும் படத்தின் முக்கிய கதைக்களமாக அமைகின்றன. யானை கடத்தப்பட்டு ஒடிசாவுக்குக் கொண்டு செல்லப்படுவதும், அங்கு விலங்குகளைப் பலி கொடுக்கும் வில்லன் கே.ஜி.எஃப் ராமிடம் அது சிக்குவதும் கதையின் அடுத்தடுத்த திருப்பங்கள். இறுதியில் வேலு தனது யானையை மீட்கிறாரா என்பதே 'படை தலைவன்' படத்தின் மையக்கதை.
நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழு
படத்தின் நாயகனாக சண்முக பாண்டியன், வேலு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடைய தந்தையாக கஸ்தூரி ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யாமினி சந்தர் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் முனிஷ்காந்த், எம்.எஸ். பாஸ்கர், கருடன் ராம், ரிஷி ரித்விக், ஏ.வெங்கடேஷ், யூகி சேது, ஸ்ரீஜித் ரவி, அருள்தாஸ் போன்ற பலர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். படத்தின் இயக்குநராக யு.அன்பு, திரைக்கதை மற்றும் வசனத்தை பார்த்திபன் தேசிங்குவுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். எஸ்.ஆர். சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்ய, எஸ்.பி. அஹமத் படத்தொகுப்பு செய்துள்ளார். இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அவரது பின்னணி இசை படத்தின் உணர்வுபூர்வமான காட்சிகளுக்குப் பெரும் பலம் சேர்த்துள்ளது. குறிப்பாக, பொள்ளாச்சி மலைகளும், ஒடிசாவின் காட்டுப் பகுதிகளும் எஸ்.ஆர். சதீஷ்குமாரின் ஒளிப்பதிவில் அழகாகப் படமாக்கப்பட்டுள்ளன. சண்டைக்காட்சிகளை மகேஷ் மேத்யூஸ் வடிவமைத்துள்ளார்.
விமர்சனங்கள் மற்றும் வரவேற்பு
'படை தலைவன்' திரைப்படம் வெளியான பிறகு, கலவையான விமர்சனங்களைப் பெற்றது. பல விமர்சகர்கள் படத்தின் மையக்கருவையும், யானைக்கும் மனிதர்களுக்குமான பிணைப்பையும் பாராட்டினர். சண்முக பாண்டியன் தனது முந்தைய படங்களை விட நடிப்பில் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளுக்கு அவரது உடல்வாகு பொருத்தமாக இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்துக்களை கூறினர். இருப்பினும், திரைக்கதையில் உள்ள தொய்வும், சில லாஜிக் மீறல்களும் படத்திற்குப் பலவீனமாக அமைந்ததாக சில விமர்சகர்கள் சுட்டிக்காட்டினர். குறிப்பாக, காணாமல் போன யானை எப்படி ஒடிசாவுக்குச் சென்றது போன்ற சில காட்சிகள் தெளிவில்லாமல் இருந்ததாகக் கூறப்பட்டது. காதல் மற்றும் நகைச்சுவைக் காட்சிகளுக்கு படத்தில் பெரிய அளவில் இடம் இல்லாததும் ஒரு குறையாகக் குறிப்பிடப்பட்டது. விஜயகாந்த் ரசிகர்கள் மத்தியில், சண்முக பாண்டியனின் நடிப்பு விஜயகாந்த்தை நினைவுபடுத்துவதாகக் கருத்துகள் எழுந்தன. மேலும், ஏஐ தொழில்நுட்பம் மூலம் விஜயகாந்த் ஒரு காட்சியில் தோன்றியது ரசிகர்களிடையே பெரும் கைதட்டல்களைப் பெற்றது. இருப்பினும், சில விமர்சனங்கள் இந்த ஏஐ தோற்றம் இயற்கையாக இல்லை என்று கருத்து தெரிவித்தன.
‘படை தலைவன்’ 5 நாள் வசூல் நிலவரம்
'படை தலைவன்' திரைப்படம் முதல் நாளில் ரூ.1.29 கோடி வசூல் செய்து, நல்ல தொடக்கத்தைக் கொடுத்தது. இரண்டாவது நாள் ரூ.1.22 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியானது. மூன்றாம் நாளில் உலக அளவில் ரூ.1.75 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாகக் கூறப்பட்டது. நான்காம் நாள் ரூ.87 லட்சமும், ஐந்தாவது நாள் ரூ.83 லட்சமும் வசூலித்துள்ளது. வெளியான முதல் 5 நாட்களில், 'படை தலைவன்' திரைப்படம் தமிழகத்தில் சுமார் ரூ. 5.96 கோடி வசூலித்துள்ளது. இந்த வசூல், விஜயகாந்த் மகன் என்ற எதிர்பார்ப்பும், யானை - மனிதன் உறவு என்ற கதைக்களமும் ரசிகர்களை ஈர்த்துள்ளதைக் காட்டுகிறது. வரும் நாட்களில் ‘குபேரா’ போன்ற புதிய படங்கள் வரிசை கட்டி நிற்பதால், 'படை தலைவன்' படத்தின் வசூல் சற்று குறையக்கூடும் என்று கணிக்கப்படுகிறது.
ஆக்ஷன் ஹீரோவாக உருவெடுத்த சண்முக பாண்டியன்
'படை தலைவன்' திரைப்படம் சண்முக பாண்டியனுக்கு ஒரு முக்கியமான படமாக அமைந்துள்ளது. தனது தந்தையைப் போல ஒரு ஆக்ஷன் ஹீரோவாக தன்னை நிலைநிறுத்த அவர் முயற்சித்திருக்கிறார். படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், பாக்ஸ் ஆபிஸில் ஒரு குறிப்பிட்ட அளவிலான வசூலை ஈட்டியுள்ளது. இது, சண்முக பாண்டியனின் அடுத்தகட்ட திரைப்பயணத்திற்கு ஒரு உந்துதலாக அமையும் என்பதில் எந்த சந்தேகமில்லை.