ஒரே நாளில் குறைந்த வசூல்..’படை தலைவன்’ 4வது நாள் வசூல் விவரம்
விஜயகாந்த் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியான ‘படை தலைவன்’ திரைப்படத்தின் வசூல் ஒரே நாளில் அதிரடியாக குறைந்துள்ளது.

Padai Thalaivan Box Office Collection
மறைந்த நடிகரும், தேமுதிக நிறுவனமான விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இவர் நடிப்பில் ஏற்கனவே வெளியான ‘சகாப்தம்’ மற்றும் ‘மதுரவீரன்’ ஆகிய திரைப்படங்கள் இவருக்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. இருப்பினும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘படை தலைவன்’. இந்தப் படத்தை ‘வால்டர்’, ‘ரேக்ளா’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் யு.அன்பு இயக்கி இருக்கிறார். வி.ஜே கிரியேஷன் சார்பில் ஜெகநாதன் பரமசிவம் இந்த படத்தை தயாரித்திருக்கிறார். படம் ஜூன் 13 ஆம் தேதி தமிழகமெங்கும் உள்ள 500 திரையரங்குகளில் வெளியானது.
நீண்ட இடைவெளிக்குப் பின் வெளியான ‘படை தலைவன்’
இந்தப் படத்தில் கஸ்தூரிராஜா, யாமினி சந்தர், கருடன் ராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்தத் திரைப்படம் கடந்த 2023 ஆம் ஆண்டு பூஜையுடன் தொடங்கியது. ஆனால் பல காரணங்களால் படம் வெளியிடப்படாமல் தள்ளிக் கொண்டே சென்றது. மே 23 2025 படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் திரையரங்குகள் கிடைக்காமல் போனதால் படத்தின் வெளியீடு மேலும் தள்ளி வைக்கப்பட்டது. இறுதியாக ஜூன் 13 ஆம் தேதி படம் வெளியிடப்பட்டது. யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே உள்ள பிணைப்பை வெளிப்படுத்தும் விதமாக உருவாகியுள்ள இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் பொள்ளாச்சி மற்றும் ஒரிசாவின் காட்டுப்பகுதியில் எடுக்கப்பட்டது.
‘படை தலைவன்’ படத்தின் கதை
பொள்ளாச்சி அருகே சேத்துமடை என்னும் கிராமத்தில் கஸ்தூரிராஜா தனது மகன் (சண்முக பாண்டியன்) மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். மேலும் அவர் மணியன் என்கிற ஒரு யானையையும் பல ஆண்டுகளாக வளர்த்து வருகிறார். யானையை ஒரு கும்பல் சில காரணங்களுக்காக கடத்தி விடுகிறது. யானையை மீட்பதற்காக சண்முக பாண்டியன் மற்றும் அவரது நண்பர்கள் செல்கின்றனர். யானை எதற்காக கடத்தப்பட்டது? அதை சண்முக பாண்டியன் மீட்டரா? யானையை மீட்கச் செல்லும் வழியில் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன? என்பதுதான் இந்த படத்தின் கதை. யானைக்கும் மனிதர்களுக்கும் இடையே உள்ள பாசத்தை வைத்து பல படங்கள் எடுக்கப்பட்டிருந்தாலும் இந்த படம் தனித்துவமான கதையம்சத்துடன் நகர்கிறது. அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் படம் வித்தியாசமான கதையை கையாள்கிறது.
‘படை தலைவன்’ வசூல் விவரம்
விஜயகாந்த் மறைவுக்குப் பின்னர் அவர் மகன் நடிக்கும் முதல் படம் என்பதால் இந்த படத்தை தேமுதிக தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் குடும்பம் குடும்பமாக சென்று ரசித்து வருகின்றனர். படத்திற்கு பெரிய அளவு புரமோஷன், விளம்பரம் என எதுவும் இல்லாதபோதும் படம் சுமாரான வசூலை பெற்று வருகிறது. முதல் மூன்று நாட்களில் இந்தியாவில் மட்டும் சுமார் ரூ.3.9 கோடி வசூலித்து இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் நாள் ரூ.1.29 கோடியையும் இரண்டாம் நாள் ரூ.1.22 கோடியையும், மூன்றாம் நாள் ரூ.1.39 கோடியையும் வசூலித்துள்ளது. நான்காவது நாளான ஜூன் 16 (திங்கட்கிழமை) வசூல் கணிசமாக குறைந்துள்ளது. நான்காவது நாளில் ‘படை தலைவன்’ ரூ.87 லட்சம் மட்டுமே வசூலித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரூ.5.13 கோடி வசூலித்த ‘படை தலைவன்’
நான்கு நாட்களில் திரைப்படம் ரூ.5.13 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது. இந்த வசூல் விபரங்கள் பாக்ஸ் ஆபீஸ் நிலவரங்களை வெளியிடும் சில இணையதளங்களின் அடிப்படையில் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வ வசூல் விவரங்களை படக்குழுவினர் விரைவில் வெளியிடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.