விஜய்யை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு தந்தையாக நடிக்கும் மோகன்லால்!
மலையாள சூப்பர்ஸ்டாரான மோகன்லால், அடுத்ததாக தமிழில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள புதிய படத்தில் அவருக்கு தந்தையாக நடிக்க உள்ளாராம்.

Mohanlal Roped in For Sivakarthikeyan's SK24 Movie :
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க உள்ளார். விஜய்யின் அப்பாவாக 'ஜில்லா' படத்தில் நடித்த பிறகு, இப்போது இளம் தலைமுறை நட்சத்திரமான சிவகார்த்திகேயனின் அப்பாவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிவகார்த்திகேயன் தனது 24வது படத்தில் 'குட் நைட்' பட இயக்குனர் விநாயக் சந்திரசேகரனுடன் இணைகிறார். இந்த படத்தில் மோகன்லால் அப்பா வேடத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது.
மோகன்லால் மகனாக சிவகார்த்திகேயன்
அப்பா-மகன் உறவை மையமாகக் கொண்ட இந்த படத்தில் மோகன்லாலுக்கு முக்கியமான கதாபாத்திரம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மோகன்லால் தமிழ் நடிகரின் அப்பாவாக நடிப்பது இது முதல் முறையல்ல. 2014 ஆம் ஆண்டு வெளியான 'ஜில்லா' படத்தில் விஜய் மற்றும் மோகன்லால் அப்பா-மகனாக நடித்தனர். ஆனால், படம் பெரிய வெற்றி பெறவில்லை.
மோகன்லால் கைவசம் உள்ள படங்கள்
இதற்கிடையில், மோகன்லாலின் சமீபத்திய வெற்றிப்படமான 'துடரும்' பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வருகிறது. தருண் மூர்த்தி இயக்கிய இந்த படம் கேரளாவில் அதிக வசூல் செய்த மலையாள படம் என்ற சாதனையை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சத்யன் அந்திக்காட் இயக்கத்தில் 'ஹிருதயபூர்வம்' படத்தில் மோகன்லால் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகை மாளவிகா மோகனனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதுதவிர ரஜினிகாந்த் உடன் 'ஜெயிலர் 2' படத்திலும் மோகன்லால் நடிக்கிறார்.
சிவகார்த்திகேயன் கைவசம் இத்தனை படங்களா?
சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி என்ற அதிரடி ஆக்ஷன் படத்தில் நடிக்கிறார். இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது. இதுதவிர அவர் கைவசம் பராசக்தி திரைப்படமும் உள்ளது. இப்படத்தை சுதா கொங்கரா இயக்குகிறார். இதில் ரவி மோகன், ஸ்ரீலீலா, அதர்வா முரளி ஆகியோர் உடன் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இது சிவகார்த்திகேயனின் 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.