லேடி வாய்ஸில் இளையராஜா பாடிய பாட்டு... சினிமாவில் அடிபொலி ஹிட் அடித்த கதை தெரியுமா?
இசைஞானி இளையராஜா லேடி வாய்ஸில் பாடிய பாடல், பின்னாளில் சினிமாவிற்காக பட்டி டிங்கரிங் செய்யப்பட்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அந்த பாடல் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Ilaiyaraaja Rare Lady Voice SongThat Turned Into a Superhit
தமிழ் திரையிசையின் கிராமிய மணம் மாறாத கிளாசிக் பாடல்களில் ஒன்று ‘ஒத்த ரூபா தாரேன்’. 1996-ம் ஆண்டு வெளியான 'நாட்டுப்புறப் பாட்டு' திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல், பட்டிதொட்டியெங்கும் ஒலித்து இன்றும் திருவிழாக்களின் அடையாளமாகத் திகழ்கிறது. ஆனால், இந்தப் பாடலின் மெட்டும் கருவும் இளையராஜாவின் சொந்த வாழ்க்கையில் அவர் சிறுவயதில் பாடிய ஒரு அரசியல் பிரச்சாரப் பாடலில் இருந்து உருவானது என்பது பலரும் அறியாத ரகசியம்.
இசைக்கச்சேரி பாட்டு
இளையராஜாவுக்கு இசையின் மீது தீராத காதல் ஏற்பட விதை போட்டவர் அவரது அண்ணன் பாவலர் வரதராஜன். கம்யூனிஸ்ட் கொள்கைகளில் தீவிரப் பற்றுக் கொண்ட பாவலர், கட்சியின் பிரச்சாரங்களுக்காகத் தனித்துவமான இசைக்கச்சேரிகளை நடத்தி வந்தார். அந்தக் கச்சேரிகளில் இளையராஜாவும் சிறுவயதிலேயே பங்கேற்றுப் பாடி வந்தார்.
பிரச்சாரப் பாடல்
ஒருமுறை கம்யூனிஸ்ட் கட்சி மேடையில் ஆணும் பெண்ணும் உரையாடுவது போன்ற ஒரு பிரச்சாரப் பாடலை பாவலர் உருவாக்கினார். அப்போது இளையராஜாவுக்கு குரல் உடையாத பருவம் என்பதால், பெண் குரலில் பாடுவதற்காக அவரை அழைத்துச் சென்றுள்ளார் பாவலர். அந்தப் பாடலின் வரிகள் அக்கால அரசியல் சூழலை நையாண்டி செய்யும் விதமாக அமைந்திருந்தது.
லேடி வாய்ஸில் பாடிய இளையராஜா
முதலில் பாடும் பாவலர் "ஒத்த ரூபா தாரேன் நான் உப்புமா காஃபியும் தாரேன்; ஓட்டுப் போடுற பொண்ணே நீ மாட்ட பாத்து போடு" என பாடுவாராம். ஏனெனில் அப்போது காங்கிரஸ் கட்சியின் சின்னமாக மாடு இருந்தது. இதையடுத்து பெண் குரலில் பாடும் இளையராஜா "உன் ஒத்த ரூபாவும் வேண்டாம்; உன்னோட உப்புமா காஃபியும் வேணாம்... ஓட்டு போட மாட்டேன் நீங்க ஊரைக் கெடுக்குற கூட்டம்" என பாடுவாராம். இப்படியே 10 ரூபாய் வரை ஏலம் விடுவது போல இருவரும் மாறி மாறிப் பாடி, இறுதியில் அந்தப் பெண் மனம் மாறி கம்யூனிஸ்ட் கொள்கையை ஏற்பது போல அந்தப் பாடல் முடியுமாம்.
அது எந்த பாட்டு?
தனது அண்ணன் மேடைகளில் பாடிய அதே பாணியையும், சந்தத்தையும் மனதில் வைத்திருந்த இளையராஜா, பல ஆண்டுகள் கழித்து அதனை 'நாட்டுப்புறப் பாட்டு' படத்தின் திரைக்கதைக்கு ஏற்ப மெருகேற்றி 'ஒத்த ரூபா தாரேன்' பாடலாக மாற்றினார். அரசியல் களத்தில் மாற்று கட்சியினரைச் சாடப் பயன்பட்ட ஒரு மெட்டு, திரையில் காதலர்களின் செல்ல ஊடலாக மாறி இன்று வரை தமிழ் மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்துள்ளது. இளையராஜாவுக்கு நன்கு பரிட்சயமான பாடலாக இருந்த போதிலும் இதை அவர் படத்தில் பாடவில்லை. அருண்மொழியும், தேவியும் இப்பாடலை பாடி இருந்தனர். இப்படத்தை தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

