இயக்குனர் வி. சேகர்-க்கு என்ன ஆச்சு? உடல்நிலை கவலைக்கிடம் - மகன் போட்ட கண்ணீர் பதிவு
தமிழ் திரையுலகில் குடும்பங்கள் கொண்டாடும் வகையில் பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் வி சேகர் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அவரது மகன் தெரிவித்துள்ளார்.

Director V Sekhar Hospitalised
மக்கள் இயக்குனர் என பெயரெடுத்தவர் வி சேகர். அவர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார் என்கிற தகவல் பரவி இருக்கிறது. நான்கு நாட்களுக்கு முன்பு அவருக்கு இதயத்தில் அடைப்பு ஏற்பட்டது. உடனடியாக ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். மூளைக்கு செல்ல வேண்டிய ரத்தம் செல்லாமல் இருப்பதால் விழி மூடிய நிலையிலேயே அவர் இருக்கிறாராம். மேலும் அவருக்கு அறுவை சிகிச்சையும் நடைபெற இருக்கிறதாம். அவர் விரைவில் உடல்நலம் பெற்றும் வீடு திரும்ப வேண்டும் என்பதே ரசிகர்களின் பிரார்த்தனையாக உள்ளது.
வி சேகர் உடல்நிலை கவலைக்கிடம்
வி சேகரின் உடல் நிலை குறித்து அவரது மகன் காரல் மார்க்ஸ் சேகர் வெளியிட்டுள்ள பதிவில், என் தந்தையும், மக்கள் இயக்குநரும், குடும்ப இயக்குநரும், திருவள்ளுவர் கலைக்கூடம் தயாரிப்பாளருமான " *வி.சேகர்* " தற்போது தன் உயிருக்காக ராமச்சந்திரா மருத்துவமனையில் போராடிக் கொண்டிருக்கிறார். அவர் விரைவில் உடல் நலம் பெற அன்பின் ஒளியாக ஒரு தீபம் ஏற்றி இறைவனை மனமார வேண்டிக் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என பதிவிட்டு இருக்கிறார்.
வி சேகர் படங்கள்
குடும்பங்கள் கொண்டாடும் வகையில் ஜனரஞ்சகமான திரைப்படங்களை எடுத்து மக்கள் இயக்குனர் என பெயரெடுத்தார் வி சேகர். இவர் இயக்கிய விரலுக்கேத்த வீக்கம், வரவு எட்டனா செலவு பத்தனா, கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, காலம் மாறிப் போச்சு போன்ற திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட்டாகின. இன்றளவும் கே டிவியில் வி சேகரின் படங்கள் ஒளிபரப்பானால், அதற்கென தனி ரசிகர் கூட்டமே இருக்கின்றது. காலம் கடந்தும் இவர் படங்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.
வி சேகர் திரைப்பயணம்
இவர் இயக்குனர் கே பாக்கியராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருந்தார். பின்னர் 1990-ம் ஆண்டு வெளிவந்த நீங்களும் ஹீரோ தான் என்கிற திரைப்படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார் வி சேகர். 18 படங்கள் இயக்கியுள்ள வி சேகர், சின்னத்திரையிலும் பொறந்த வீடா புகுந்த வீடா, என்கிற சீரியலை இயக்கி இருக்கிறார். சன் டிவியில் இந்த சீரியல் ஒளிபரப்பானது. கடைசியாக தன் மகனை ஹீரோவாக வைத்து சரவண பொய்கை என்கிற படத்தை இயக்கினார். ஆனால் அந்தப் படம் ரிலீஸ் ஆகவில்லை.