ஹீரோவானார் திண்டுக்கல் லியோனி மகன்... தயாரிப்பாளர் யார் தெரியுமா?
அப்பாவை தொடர்ந்து திண்டுக்கல் லியோனியின் மகனான லியோ சிவக்குமார் ஹீரோவாக நடிக்க உள்ள படத்தின் பூஜை விமர்சையாக நடைபெற்றது.
தமிழகத்தில் பட்டிமன்ற பேச்சாளராக மிகவும் பிரபலமானவர் திண்டுக்கல் ஐ.லியோனி. தன்னுடைய கலகலப்பான பேச்சால் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த லியோனி, 1997ம் ஆண்டு வெளியான கங்கா கெளரி திரைப்படத்தில் அப்பா கேரக்டரில் நடித்திருந்தார்.
அதன் பின்னர் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்த திண்டுக்கல் லியோனி, திமுக கொள்கை பரப்புச் செயலாளராக செயல்பட்டு வருகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு திண்டுக்கல் லியோனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள படத்திற்கு சமீபத்தில் பூஜை போடப்பட்டது.
கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸுடன் தயாரிப்பாளர் சந்துரு இணைந்து தயாரிக்கும் ஆலம்பனா படத்தில் சிறப்பு தோற்றத்தில் திண்டுக்கல் லியோனி நடிக்க உள்ளார். முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை ஆகிய படங்களில் துணை மற்றும் இணை இயக்குநராக பணியாற்றிய பாரி.கே.விஜய் இயக்கவுள்ளார்.
தற்போது அப்பாவை தொடர்ந்து திண்டுக்கல் லியோனியின் மகனான லியோ சிவக்குமார் ஹீரோவாக நடிக்க உள்ள அழகிய கண்ணே படத்திற்கான பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் சஞ்சிதா ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார்.
சீனு ராமசாமியிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய விஜயகுமார் என்பவர் இயக்க உள்ள அழகிய கண்ணே படத்தை, தளபதி விஜய்யின் நெருங்கிய உறவினரும், மாஸ்டர் பட தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோ தயாரிக்க உள்ளார்.
மகன் ஹீரோவாக அறிமுகமாக உள்ள படத்திற்கான பூஜையில் திண்டுக்கல் லியோனி குடும்பத்துடன் பங்கேற்ற புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.