அமலாக்கத்துறையிடம் சிக்கும் தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன்? என்ன காரணம் தெரியுமா?
டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஆகாஷ் பாஸ்கரன் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகி இருக்கும் நிலையில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், தனுஷ், சிம்பு ஆகியோரை அமலாக்கத்துறை விசாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Tasmac ED Raid
டாஸ்மாக்கில் முறைகேடு நடப்பதாக அமலாக்கத்துறைக்கு கிடைத்த தகவலையடுத்து டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மதுபான ஆலைகளில் சோதனை நடத்தப்பட்டது. சோதனையின் முடிவில் ரூ.1000 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது. தொடர்ந்து டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் வீடு, எஸ்.என்.ஜே மதுபான நிறுவன அலுவலகங்கள், ‘பராசக்தி’ படத்தை தயாரித்து வரும் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீடு, தொழிலதிபர் தேவகுமார் வீடு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
ஆகாஷ் பாஸ்கரன் தலைமறைவு
தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்களும், தகவல்களும் கிடைத்ததாக கூறப்படுகிறது. எனவே ஆகாஷ் பாஸ்கரனை நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் மே 21-ம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகி உள்ளார். அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவலை அமலாக்கத்துறை சேகரித்து வருகிறது.
வசமாக சிக்கிய ஆவணங்கள்
ஆகாஷ் பாஸ்கரன் சிவகார்த்திகேயனை வைத்து ‘பராசக்தி’ படத்தையும், நடிகர் தனுஷை வைத்து ‘இட்லி கடை’ படத்தையும், சிம்புவின் 49-வது படத்தையும் தயாரித்து வருகிறார். இந்த படங்களில் நடிப்பதற்காக டான் பிக்சர்ஸ் நிறுவனம் தரப்பிலிருந்து சிவகார்த்திகேயன், தனுஷ், சிம்பு ஆகிய மூன்று நடிகர்களுக்கும் ரொக்கமாக மிகப்பெரிய தொகை கை மாறி இருக்கும் ஆவணங்கள் அமலாக்கத் துறையிடம் சிக்கி இருப்பதாக தெரிகிறது.
விசாரணை வளையத்துக்குள் நடிகர்கள்
ஆகாஷ் பாஸ்கரன் தலைமறைவாகி இருப்பதால் சிவகார்த்திகேயன், சிம்பு, தனுஷ் ஆகிய மூவரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.