“நான் அந்த சாதியாக இருந்திருந்தால்”... சாதியை வைத்து அழகை வர்ணித்தவருக்கு நடிகை ரித்விகாவின் அதிரடி பதில்...!
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்ற நடிகை ரித்விகா வெளியிட்ட புகைப்படத்தை சாதி அடிப்படையில் வர்ணித்த நபருக்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக அறிக்கை ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
பாலா இயக்கத்தில் 2013ம் ஆண்டு வெளியான பரதேசி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவார் ரித்விகா. முதல் படத்திலேயே முக்கிய கதாபாத்திரத்தில் கலக்கினார்.
அதனைத் தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கிய கபாலி, மெட்ராஸ், மற்றும் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு உள்ளிட்ட படங்களில் மிகவும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தார்.
அதிலும் “இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு” திரைப்படத்தில் ரித்விகாவின் கேரக்டர் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரித்விகா டைட்டில் வின்னராகவும் தேர்வாகி தமிழ்நாடு முழுவதும் பிரபலமானார்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ரித்விகாவை நெட்டிசன் ஒருவர் தேவையில்லாமல் சாதி பெயரை சொல்லி அசிங்கப்படுத்தும் நோக்குடன் பதிவிட்டுள்ளார்.
அதற்கு நெத்தியடி பதில் கொடுக்கும் விதமாக ரித்விகா பதிவு செய்துள்ள ட்வீட் சோசியல் மீடியாவில் பதிவாகி வருகிறது.
அந்த அறிக்கையில், தலித்தாக இருப்பின் மிக்க மகிழ்ச்சி அடைந்திருப்பேன். என்ன செய்ய? அப்பாக்கியம் நானடையேன். நானும் அடக்குமுறைகள் செய்த குற்றமிகு ஆதிக்க சாதிகளுள் பிறந்தவள் தான். வருந்துகிறேன். இனியாவது சாதிகளற்ற சமூகமாக, மனிதர்களாக வாழ முயற்சிப்போம். நிற்க
ஒருவகையில் நானும் தலித் தான். ஒடுக்கப்பட்டோர் அனைவரும் தலித் எனின் பெண்ணாகிய நானும் தலித் தானே. காலங்காலமாக ஆண்களால் ஒடுக்கப்பட்டோர் தானே. ஆம் தலித். எம்மை தலித்தாக்கிய பிழையும் பாவமும் தங்கள் ஆணினத்தையே சாரும். மற்றபடி எம் அழகைப் பாராட்டியதற்கு நன்றி.
Riythvika
அத்துடன் பி.கு. தலித் பெண்கள் என்னை விட அழகு என குறிப்பிட்டுள்ளார்.
ரித்விகாவின் இந்த பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.