ஏ.ஆர்.முருகதாஸ் சொன்ன சூப்பர் ஸ்டோரி... கிரீன் சிக்னல் காட்டிய சிம்பு - முதன்முறையாக இணைய உள்ள மாஸ் கூட்டணி!
AR Murugadoss : தர்பார் படத்துக்கு பின்னர் கடந்த 2 ஆண்டுகளாக படங்கள் எதுவும் இயக்காமல் இருந்து வரும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்ததாக சிம்புவுடன் கூட்டணி அமைக்க உள்ளாராம்.
நடிகர் சிம்பு தற்போது தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருகிறார். இவர் கைவசம் வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார் ஆகிய படங்கள் உள்ளன. இதில் கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 15-ந் தேதி ரிலீசாக உள்ளது.
இதையடுத்து தற்போது ஒபிலி என் கிருஷ்ணா இயக்கும் பத்து தல படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இப்படத்தில் அவர் கேங்ஸ்டராக நடிக்கிறார். இது கன்னடத்தில் வெளியாகி வெற்றிபெற்ற மஃப்டி படத்தின் ரீமேக் ஆகும். சிம்புவுடன் கவுதம் கார்த்திக், கவுதம் மேனன், பிரியா பவானி சங்கர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
இதையும் படியுங்கள்... ரன்வீர் சிங்குக்கு ஆதரவு..! சூப்பர் மார்க்கெட்டில் திடீரென ஆடைகளை அவிழ்த்துபோட்டு நிர்வாணமாக வலம் வந்த பிரபலம்
இதுதவிர கொரோனா குமார் என்கிற படத்திலும் நடிக்க கமிட் ஆகி உள்ளார் சிம்பு. இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை கோகுல் இயக்குகிறார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங்கும் விரைவில் தொடங்க உள்ளது.
இந்நிலையில், நடிகர் சிம்புவுக்கு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கதை ஒன்றை சொல்லியுள்ளாராம். சிம்புவுக்கு அவர் சொன்ன கதை பிடித்துப்போனதால், இவர்கள் இருவரும் கூட்டணி அமைப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது. இது உறுதியானால் இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றும் முதல் படமாக இது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... மனைவி இயக்கிய பேப்பர் ராக்கெட் வெப் தொடரை விமர்சனம் செய்த உதயநிதி - என்ன சொல்லிருக்கார் தெரியுமா?