- Home
- Cinema
- Ajith - Vijay : நண்பர் விஜய்-க்கு நன்றி சொல்லி அறிக்கை வெளியிட்ட அஜித் - எதுக்காக தெரியுமா?
Ajith - Vijay : நண்பர் விஜய்-க்கு நன்றி சொல்லி அறிக்கை வெளியிட்ட அஜித் - எதுக்காக தெரியுமா?
Ajith thank Vijay : தமிழ்நாட்டில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்த நிலையில், அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் அஜித்.

விஜய்க்கு நன்றி சொன்ன அஜித்
தமிழ்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்கப்படும் என்ற முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் அறிவிப்புக்கு நடிகரும், கார் பந்தய வீரருமான அஜித்குமார் வரவேற்பு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப் பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து, தனது அறிக்கை மூலம் அஜித்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
CM Vijay : பிரிட்டனில் ஃபேமிலி ரீயூனியன்? மனைவி சங்கீதாவை சந்திக்கப்போகிறாரா முதல்வர் விஜய்?
அஜித் வெளியிட்ட அறிக்கை
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக இளைஞர்களை விளையாட்டுத் துறையில் அதிகளவில் ஈடுபடுத்தவும், அவர்களிடம் இருக்கும் திறமைகளை அடையாளம் கண்டு சரியான பயிற்சியின் மூலம் வளர்க்கவும் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை என்று குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, தமிழகத்தில் தனி மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி உருவாக்கப்பட இருப்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மோட்டார் ஸ்போர்ட்ஸில் நேரடியாக ஈடுபட்டு வரும் ஒருவர் என்ற முறையில், இந்த அறிவிப்பை இந்திய மோட்டார் பந்தயத் துறையின் முக்கியமான முன்னேற்றமாகக் கருதுவதாக அஜித்குமார் தெரிவித்துள்ளார். மேலும், முதலமைச்சர் விஜய்யின் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் அவர் தெரிவித்துள்ளார்.
எப்படி இருக்கும் புதிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி?
தமிழ்நாடு ஏற்கனவே ஆட்டோமொபைல் உற்பத்தியில் முக்கிய மாநிலமாக விளங்கி வருகிறது. இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களைத் தயாரிக்கும் பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றன. அதேபோல், மோட்டார் ஸ்போர்ட்ஸ் வாகன உற்பத்தி சார்ந்த சில முக்கிய நிறுவனங்களும் குறிப்பாக கோயம்புத்தூரில் இயங்கி வருகின்றன.
சென்னைக்கு அருகே உள்ள இருங்காட்டுக்கோட்டையில் அமைந்துள்ள மெட்ராஸ் இன்டர்நேஷனல் சர்க்யூட் மற்றும் கோயம்புத்தூரில் உள்ள KARI Motor Speedway ஆகியவை தமிழகத்தின் முக்கிய பந்தயத் தடங்களாக உள்ளன. இங்கு தேசிய அளவில் F3, F4 உள்ளிட்ட கார் பந்தயப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
சர்வதேச கார் ரேஸ் நடத்த திட்டம்
இந்த பின்னணியில், சர்வதேச தரத்தில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரத்தை உருவாக்குவதன் மூலம் தமிழகத்தின் விளையாட்டுத் துறைக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்க முடியும் என அரசு கருதுகிறது.
புதிய நகரத்தில் சர்வதேச தரத்திலான பந்தயத் தடம், நவீன உள்கட்டமைப்பு, பயிற்சி மையங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. மேலும், ஃபார்முலா 1, ஃபார்முலா 2, ஃபார்முலா 3, ஃபார்முலா 4 போன்ற சர்வதேச அளவிலான போட்டிகளை நடத்துவதற்கான கட்டமைப்புகளும் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தமிழக இளைஞர்களின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் திறமைகளை கண்டறிந்து, அவர்களுக்கு முறையான பயிற்சியும் போட்டி வாய்ப்புகளும் வழங்கப்பட உள்ளன. எதிர்காலத்தில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் சாதிக்கும் வீரர்களை உருவாக்குவதுடன், விளையாட்டுச் சுற்றுலா, வேலைவாய்ப்பு மற்றும் சிறப்பு வாகன உற்பத்தித் துறைகளின் வளர்ச்சிக்கும் இந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

