- Home
- Cinema
- தேசிய விருதால் பெருமகிழ்ச்சி! ஜோவிற்கும், என் பிள்ளைகளுக்கும் இந்த விருதை உரித்தாக்குகிறேன்- சூர்யா நெகிழ்ச்சி
தேசிய விருதால் பெருமகிழ்ச்சி! ஜோவிற்கும், என் பிள்ளைகளுக்கும் இந்த விருதை உரித்தாக்குகிறேன்- சூர்யா நெகிழ்ச்சி
தேசியவிருது அங்கீகாரம், நல்ல திரைப்படங்களில் தொடர்ந்து பணியாற்றும் ஊக்கத்தை அளிப்பதாக நடிகர் சூர்யா தனது அறிக்கையில் நெகிழ்ச்சி உடன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் 25 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருபவர் சூர்யா. இவர் ஆரம்பக்கட்டத்தில் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டாலும், பின் தனது கடின உழைப்பால் முன்னேறி இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக திகழ்கிறார். இவரின் சாதனைப் பயணத்தில் மேலும் ஒரு மகுடமாய் கிடைத்துள்ளது தான் தேசிய விருது. சூரரைப் போற்று படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை முதன்முறையாக வென்ற சூர்யா, அதற்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது : “வணக்கம்... அன்பான வாழ்த்துகளால் வாழ்வை நிறைக்கும் அனைவருக்கும் முதலில் என் மனமார்ந்த நன்றிகள்.. சூரரைப் போற்று திரைப்படத்திற்கு 'ஐந்து தேசிய விருதுகள் கிடைத்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது, பெருந்தொற்று காலத்தில் எதிர்பாராத நெருக்கடிகளுக்கு இடையில் வெளியான இத்திரைப்படத்திற்கு இந்திய அளவில் வரவேற்பு கிடைத்தது, தன்னம்பிக்கை நிறைந்த கேப்டன் கோபிநாத் அவர்களின் வாழ்வைச் சிறந்த திரைப்படமாக்க பல ஆண்டுகள் உழைத்த, இயக்குநர் சுதா கொங்கரா அவர்களின் படைப்புத் திறனுக்குச் சிறந்த அங்கீகாரம் கிடைத்திருப்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.
இதையும் படியுங்கள்... இது தான் உங்கள் பிறந்த நாள் பரிசு..! இந்திய அளவில் #SooraraiPottru ஹேஷ் டேக்கை ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்!
தேசியவிருது பெறுகிற சுதா கொங்கரா - ஷாலினி உஷாநாயர், ஜி.வி. பிரகாஷ் அபர்ணா பாலமுரளி, இணைத் தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் உள்ளிட்ட அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள். சிறந்த திரைப்படத்தை தயாரிக்க துணைநின்ற படக்குழுவினர் அனைவருக்கும் இந்த அங்கீகாரம் உரியது. மேலும், சிறந்த நடிகருக்கான தேசிய விருதை என்னுடன் பகிர்ந்து கொள்ளும் சகோதரர் அஜய் தேவ்கன் அவர்களுக்கும், மேலும் தேசிய விருது பெறுகிற இயக்குநர் வசந்த் சாய், ஸ்ரீகர் பிரசாத், லஷ்மி ப்ரியா சந்திரமெளலி, இயக்குநர் மடோன் அஸ்வின் மற்றும் 68-வது தேசியவிருது பெறுகிற சக கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
இதையும் படியுங்கள்... 5 தேசிய விருதுகளை அள்ளிக்குவித்த சூர்யாவின் சூரரைப் போற்று - யார் யாருக்கு என்ன விருது.. முழு விவரம்
'நேருக்கு நேர் திரைப்படத்தில் என் மீது நம்பிக்கை வைத்து அறிமுகம் செய்த இயக்குநர் வசந்த் சாய் அவர்களுக்கும், தயாரிப்பாளர் இயக்குநர் மணிரத்னம் அவர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்பும், வழிகாட்டலும் தந்து எப்போதும் துணைநிற்கும் அம்மா, அப்பா, கார்த்தி, பிருந்தா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், 'சூரரைப் போற்று' திரைப்படத்தில் நடிக்கவும், தயாரிக்கவும் வலியுறுத்திய என் ஜோதிகாவிற்கும், அன்பு பிள்ளைகள் தியா, தேவ் ஆகியோருக்கும் இந்த விருதை அன்புடன் உரித்தாக்குகிறேன்.
என் முயற்சிகளை வரவேற்று கொண்டாடும் மக்களுக்கும், என்னுடைய ஏற்றத் தாழ்வுகளில் எப்போதும் உடனிருக்கும் அன்பு தம்பி தங்கைகளுக்கும் நெஞ்சம் நிறைந்த அன்பும்.. நன்றியும். இந்த தேசியவிருது அங்கீகாரம், நல்ல திரைப்படங்களில் தொடர்ந்து பணியாற்றும் ஊக்கத்தை அளிக்கிறது. தேர்வுக் குழுவினருக்கும், இந்திய அரசிற்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள். அன்பின் வாழ்த்துகளால் நெகிழச் செய்கிற அனைவருக்கும் மீண்டும் நன்றி” என நெகிழ்ச்சி உடன் பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... ஜெயிச்சுட்ட மாறா... முதன்முறையாக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றார் சூர்யா