20 வருடத்திற்கு பின் மீண்டும் சூர்யாவுடன் இணையும் முக்கிய பிரபலம்!
சுமார் 20 வருடங்களுக்கு பின், தற்போது சூர்யா இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ள படத்தில் முக்கிய பிரபலம் ஒருவர் இணைந்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
சுதாகொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த சூரரைப் போற்று திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இதையடுத்து இயக்குநர் வெற்றிமாறன் உடன் வாடிவாசல், பாண்டியராஜ் உடன் ஒரு படம் என அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி இருந்தார் சூர்யா.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி 7ம் தேதி அன்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு மீண்டு வருவதாக நடிகர் சூர்யா பதிவிட்டது பரபரப்பை கிளப்பியது. பூரண உடல் நலத்துடன் சூர்யா மீண்டு வரவேண்டுமென திரையுலகினர், ரசிகர்கள் பலரும் வாழ்த்து கூறினர்.
அதன் பயனாக பிப்ரவரி 11ம் தேதி சூர்யா மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். இருப்பினும் சில நாட்களுக்கு மருத்துவர்கள் அவரை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள கூறியுள்ளதால், தற்போது சூர்யா ஓய்வில் இருக்கிறார்.
இந்நிலையில் பாண்டியராஜ் - சூர்யா கூட்டணியில் உருவாக உள்ள சூர்யா 40 படத்திற்கான ஷூட்டிங் இன்று பூஜையுடன் ஆரம்பமானது. சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார்.
இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் நடித்த பிரியங்கா அருள்மோகன் நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
சூர்யா தற்போது ஓய்வில் இருப்பதால் முதற்கட்டமாக அவர் இல்லாத காட்சிகளை படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன் பின்னர் சூர்யா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.
இந்நிலையில் இன்னும் சூர்யா படப்பிடிப்பில் கலந்து கொள்ளாத நிலையில், இந்த படத்தில் சூர்யா இயக்குனர் பாலா இயக்கத்தில் நடித்து வெளியான 'நந்தா' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ராஜ்கிரண் இந்த படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.