சேலம், தொளசம்பட்டி அருகே தொழிலாளியின் கழுத்தை இறுக்கி கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய தந்தை, அக்காள் மகனை போலீசார் கைது செய்தனர்.
போதையில் தகராறு :
ஓமலூர் அடுத்த தொளசம்பட்டி ராமகிருஷ்ணனூர் தச்சன்காடு பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகன் தனபால் (வயது 35). தொழிலாளி. திருச்செங்கோட்டில் வசித்து வந்த இவர் அவ்வப்போது சொந்த ஊருக்கு சென்று வருவது வழக்கம். தனபால் மீது நாமக்கல், மேச்சேரி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் கொலை, அடிதடி வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி சொந்த ஊருக்கு வந்த தனபால் வீட்டில் தூக்குப்போட்டு இறந்து விட்டதாக கூறி தொளசம்பட்டி போலீசில் பெருமாள் புகார் கொடுத்தார்.

இதுகுறித்து போலீசார் தற்கொலை வழக்குப்பதிவு செய்ததுடன், தனபால் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வந்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் தனபால் தாக்கப்பட்டு கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டதாக தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் பெருமாளிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
தற்கொலை அல்ல கொலை :
தனபால் சொந்த ஊருக்கு குடிபோதையில் வந்து தந்தை பெருமாளிடம் தகராறு செய்து தாக்குவாராம். அதன்படி சம்பவத்தன்று தனபால் தந்தை பெருமாளை குடிபோதையில் தாக்கி தகராறு செய்தார். அன்றைய தினம் சேலம் பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்த தனபாலின் அக்காள் மகன் சரண்ராஜ் (20) தாத்தாவை பார்க்க வந்தார்.

அங்கு தனபால் குடிபோதையில் பெருமாளிடம் தகராறு செய்யவே ஆத்திரமடைந்த பெருமாள் தனது பேரன் சரண்ராஜூடன் சேர்ந்து தாக்கி கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்து தூக்கில் தொங்க விட்டது தெரியவந்தது. இதனையடுத்து தொளசம்பட்டி போலீசார் தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றி பெருமாள் மற்றும் சரண்ராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
தொழிலாளி குடிபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரம் அடைந்து கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய தந்தை, பேரன் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
