நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே காதல் விவகாரத்தில் டிப்ளமோ என்ஜினீயர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
காதல் விவகாரம் :
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள மின்னாம்பள்ளி அண்ணாநகரை சேர்ந்தவர் துரை. இவருடைய மனைவி லட்சுமி. இந்த தம்பதியின் மகன் விஜய். இவருக்கு வயது 22 ஆகும். டிப்ளமோ என்ஜினீயரான இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார். இவர் அதே பகுதியை சேர்ந்த 22 வயதான இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார். இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜய், தனது குடும்பத்துடன் சென்று அந்த இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்ள பெண் கேட்டார்.

அப்போது இளம்பெண்ணின் குடும்பத்தினர் பெண் தர மறுத்துள்ளனர். இதனால் இரு குடும்பத்தாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த விஜய் திடீரென மாயமானார். அவரை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.
இதனிடையே நேற்று காலை அண்ணாநகரை அடுத்த தண்டவாள பகுதியில் ஒரு வாலிபரின் பிணம் கிடப்பதாக விஜயின் பெற்றோருக்கு தகவல் கிடைத்தது. இதனால் அவர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது விஜய் அங்கு பிணமாக கிடந்ததை பார்த்து அவர்கள் கதறி அழுதனர். விஜய் காதல் தகராறில் கொலை செய்யப்பட்டதாக தகவல் காட்டுத்தீ போல பரவியது.
கொலை செய்யப்பட்ட சம்பவம் :

இதனால் அவரின் உறவினர்கள், பொதுமக்கள் புதன்சந்தை-சேந்தமங்கலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த சேந்தமங்கலம் போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விஜயின் உறவினர்கள், காதல் விவகாரத்தால் இளம்பெண்ணின் வீட்டார் அவரை வயிற்றை அறுத்து கொலை செய்து தண்டவாளத்தில் வீசியதாகவும், கொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறினர்.
தொடர்ந்து போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. விசாரணையில் அந்த வழியாக சென்ற ரெயிலின் டிரைவர், விஜய் ரெயில் மோதுவதற்கு முன்பே தண்டவாளத்தில் பிணமாக கிடந்ததாக ரெயில் நிலையத்தில் கூறி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து விஜயின் அக்காள் சவுந்தர்யா சேந்தமங்கலம் போலீசில் புகார் அளித்தார்.

தற்கொலையா ? கொலையா ? :
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காதலித்த பெண் கிடைக்காததால் விஜய் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது காதல் விவகாரத்தால் அவர் கொலை செய்யப்பட்டு தண்டவாளத்தில் வீசப்பட்டாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கிறார்கள். காதல் விவகாரத்தில் டிப்ளமோ என்ஜினீயர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
