அண்மையில் வெளியாகி தாறுமாறா ஓடிக் கொண்டிருக்கும் அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படம் ஒரு நல்ல சினிமா மட்டுமல்லாமல் சட்டத்தை மதிக்க பொது மக்களுக்கு கற்றுத் தருகிறது என காவல்துறை அதிகாரிகளே தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு கடந்த 10 ஆம் தேதி நடிகர் அஜித் நடித்த விஸ்வாசம் படம் திரையிடப்பட்டது. தமிழ் திரையுலகைக் பொறுத்த வரை அஜித் எப்போதுமே ஓபனிங் கிங் தான் என அறியப்படுகிறார். அதைப் போலவே விஸ்வாசம் திரைப்படமும் திரையிட்டது முதல் வசூலில் கொடி கட்டிப் பறக்கிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அந்த அளவுக்கு இந்த திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. சாதாரண ரசிகர்கள் மட்டுமல்லாமல் பெண்கள், குழந்தைகளையும் இப்படம் கவர்ந்துள்ளது. படத்தில் ஆபாசம் இல்லை… சிகரெட் பிடிக்கும் காட்சிளோ, மது அருந்தும் காட்சிகளோ இல்லை என்பதை அனைவரும் ரசிக்கின்றனர்.

இந்நிலையில் விஸ்வாசம் திரைப்படத்தை காவல் துறையினரும் கொண்டாடி வருகின்றனர், சென்னை காவல் துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், தனது முகநூலில், விஸ்வாசத்தை பாராட்டியுள்ளார்.

விஸ்வாசம் படத்தில் கதை, நடிப்பு, சண்டை காட்சிகள் என ஏதோ ஒரு வகையில் பிடித்திருந்தாலும், சில காட்சிகள் தனக்கு மகிழ்ச்சியைத் தருவதாக குறிப்பிட்டுள்ளார், படத்தில் கதாநாயகன், கதாநாயகி இருவரும் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது ஹெல்மட் அணிந்து செல்வது… கார் ஓட்டும் போது சீட் பெல்ட் அணிவது… மகளைக் காப்பாற்ற அவசரமாக செல்லும் போதுகூட சீட் பெல்ட் அணிந்து செல்வது… பெற்றோர்கள் தங்கள் கனவுகளை தங்கள் குழந்தைகள் மேல் திணிக்காமல் அவர்கள் கனவுகளை நிறைவேற்ற நினைப்பது என ஒவ்வொரு காட்சியும் மனதில் நிற்பதாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலேயே சாலை விபத்துகளில் அதிக உயிரிழப்பு தமிழகத்தில் நிகழுகிறது.. அஜித்குமார் போன்ற நடிகர்கள் போக்குவரத்து விதிகளை பின்பற்றி நடிக்கும் போது அவரது ரசிகர்களும் அதைப் பின்பற்றவார்கள் என தெரிவித்துள்ளார்.

விஸ்வாசம் படத்தில் நடித்துள்ள நடிகர்கள், இயக்குநர் உள்ளிட்ட அனைவரையும் பாராட்டுவதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

விஸ்வாசம் திரைப்படம் அஜித் ரசிகர்களை மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரையும் ஏதோ ஒரு வகையில் கவர்ந்துள்ளது என்பதே உண்மை.