முன் ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றது ஏன்?... நடிகர் விஷ்ணு விஷால் விளக்கம்...!
இதனிடையே தனது தந்தை முன்ஜாமீன் மனுவை திரும்ப பெற்றது குறித்து விஷ்ணு விஷால் விளக்கமளித்துள்ளார்.
நடிகர் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்த “வீரதீர சூரன்” என்ற திரைப்படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் சூரி நடித்துள்ளார்.இதற்காக வழங்க வேண்டிய ரூ.40 லட்சம் ஊதியத்துக்கு பதில் சிறுசேரியில் ஒரு நிலத்தை தருவதாக அப்படத்தின் தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் மற்றும் விஷ்ணு விஷால் தந்தையும், ஓய்வு பெற்ற டி.ஜி.பி.யுமான ரமேஷ் குடவாலா கூறியுள்ளனர். அந்த நிலத்துக்காக இவர்கள் இருவரும் தன்னிடம் இருந்து ரூ.2.70 கோடியை கூடுதலாக பெற்று மோசடி செய்து விட்டதாக காவல்துறையில் நடிகர் சூரி புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் பதிவான வழக்கை தற்போது மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், காவல்துறையினர் தங்களை கைது செய்யக்கூடும் என்ற அச்சத்தில் சென்னை சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் டி.ஜி.பி யும் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையுமான ரமேஷ் குடவாலா முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
இதையும் படிங்க: அடி ஆத்தி ‘சூப்பர் சிங்கர்’ ராஜலட்சுமியா இது?.... மெல்லிய புடவையில் மெருகேறி ஜொலிக்கும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்...!
இந்த வழக்கு கடந்த முறை நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் ஆகியோர் தொடர்ந்த முன் ஜாமின் வழக்குகளில் இருந்து தான் விலகுவதாக தெரிவித்து வழக்குகளை வேறு நீதிபதிக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தார். வழக்குகளில் இருந்து தான் விலகியதற்கான காரணத்தை நீதிபதி குறிப்பிடவில்லை.
இந்நிலையில், இந்த இரண்டு முன் ஜாமின் வழக்குகள் நேற்றி நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தன்னுடைய முன் ஜாமின் மனுவை திரும்ப பெற்றுக்கொள்வதாக ரமேஷ் குடவாலா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி, ரமேஷ் குடவாலாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் முன் ஜாமின் மனு தொடர்பாக நவம்பர் 26 ஆம் தேதிக்குள் பதிலளிக்க மத்திய குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டார்.
மேலும் இந்த வழக்கில் பணத்தை திருப்பிக் கொடுத்தால் போதுமா அல்லது நடவடிக்கை எடுக்க வேண்டுமா? என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சூரி தரப்பு வழக்கறிஞர், “பணம் திரும்பக் கிடைத்தால் போதும். நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது நோக்கம் அல்ல” என்று தெரிவித்தார்.இதையடுத்து வழக்கு விசாரணையை நவ 24-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: நயன்தாரா டூ ஐஸ்வர்யா ராஜேஷ் வரை தமிழ் ஹீரோயின்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?... பட்டியல் இதோ...!
இதனிடையே தனது தந்தை முன்ஜாமீன் மனுவை திரும்ப பெற்றது குறித்து விஷ்ணு விஷால் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், எனது அப்பா முன்ஜாமீன் மனுவை திரும்ப பெற்றுக்கொண்டார். மீண்டும் சொல்கிறேன், எங்களுக்கும் சூரி, அன்புச்செல்வன் இடையே நடந்த நில விவகாரத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. நீதித்துறை, தமிழக முதலமைச்சர் மற்றும் தமிழக காவல்துறை ஆகியவற்றின் மீது நம்பிக்கை உள்ளது. நீதி நிலைநாட்டப்படும் என தெரிவித்துள்ளார்.