நடிகர் வடிவேலு திரைப்படங்களில் நடிக்க தடை விதித்து, தயாரிப்பாளர் சங்கம் விதித்த தடை, சுமூக பேச்சுவார்த்தைகள் மூலம் நீக்கப்பட்டதாக அறிக்கை வெளியிட்டு தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இதுகுறித்து பிரபல செய்தி சேனலுக்கு கொடுத்த பேட்டியில் இது தன்னுடைய மறு ஜென்மம் என உருகியுள்ளார், வடிவேலு.
நடிகர் வடிவேலு திரைப்படங்களில் நடிக்க தடை விதித்து, தயாரிப்பாளர் சங்கம் விதித்த தடை, சுமூக பேச்சுவார்த்தைகள் மூலம் நீக்கப்பட்டதாக அறிக்கை வெளியிட்டு தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இதுகுறித்து பிரபல செய்தி சேனலுக்கு கொடுத்த பேட்டியில் இது தன்னுடைய மறு ஜென்மம் என உருகியுள்ளார், வடிவேலு.
கடந்த 2006 ஆம் ஆண்டு வடிவேலு ஹீரோவாக நடித்து வெளிவந்த திரைப்படம் தான் "இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி". இயக்குனர் ஷங்கரின் பிரமாண்ட தயாரிப்பில் சிம்பு தேவன் இயக்கிய இப்படம் ரசிகர்களில் தாறுமாறாக ஹிட் அடித்தது. காமெடியில் கலக்கிய வடிவேலுவை கதாநாயகனாக களமிறக்கி கல்லா கட்டினார்கள். பாக்ஸ் ஆபிஸிலும் முன்னணி நாயகர்களுக்கு இணையான வசூலை அள்ளியது.

இதை தொடர்ந்து அடுத்தடுத்து ஹீரோவாக மட்டுமே படத்தில் நடிக்க அதிக ஆர்வம் காட்டினார் வடிவேலு. அந்த வகையில் நடித்த எலி, இந்திரா லோகத்தில் நான் அழகப்பன் ஆகிய படங்கள் படு தோல்வியை சந்தித்தது. எனவே மீண்டும் சில படங்களில் காமெடி ரோலில் நடிக்க துவங்கிய இவரை வைத்து '23 ஆம் புலிகேசி' படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முன்வந்த இயக்குனர் சிம்பு தேவன். இந்த படத்தை இயக்குனர் ஷங்கர் தயாரித்தார். மிக பிரமாண்ட செட் அமைத்து சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த போதும், படப்பிடிப்புக்கு வடிவேலு சரியாக ஒத்துழைப்பு தரவில்லை என்று புகார் எழுந்தது.

இதை தொடர்ந்து, இதுவே மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்து... இயக்குனர் ஷங்கர் வடிவேலுவால் பல கோடி நஷ்டம் ஏற்பட்டதாக தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தார். எனவே வடிவேலுவுக்கு ரெட் கார்டு போட்டதால் இவரை வைத்து படம் இயக்க தயாரான இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் கூட பின்வாங்கினர். பல வருடங்களாக இழுபறியாக இருந்த '24 ஆம் புலிகேசி' படத்தின் பிரச்சனை தற்போது தீர்க்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நேற்று வெளியிடப்பட்டிருந்த அறிக்கையில் , "தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக உள்ள எஸ்.பிக்சர்ஸ் ஷங்கர் அவர்கள், “23ம் புலிகேசி-II” திரைப்படத்தில் நடித்த, நடிகர் வடிவேல் மீது புகார் அளித்திருந்தார். மேற்படி புகார் சம்பந்தமாக, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், நடிகர் வடிவேலு மற்றும் எஸ்.பிக்சர்ஸ் நிறுவனத்தினை நேரில் அழைத்து பேசி மேற்கண்ட பிரச்சனைக்கு சுமூகமாக தீர்வு காணப்பட்டுள்ளது என்று இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடிவேலு மீதான தடை நீங்கியதை அவரது ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்த நிலையில், தற்போது இதுகுறித்து பிரபல செய்தி தொலைக்காட்சிக்கு, பேட்டி அளித்துள்ளார் வடிவேலு. அதில் 'சினிமாவில் எனக்கு மறுபிறவி. என் மீதான தடை நீங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது சுராஜ் இயக்கும் நாய் சேகர் படத்தில் அடுத்த மாதம் முதல் நடிக்கவுள்ளதாகவும், இரண்டு படங்களில் மட்டுமே நாயகனாக நடித்து விட்டு, மீண்டும் காமெடியில் கவனம் செலுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இரண்டு படங்களுக்கு மேல் ஹீரோவாக நடிக்க மாட்டேன் என வடிவேலு கூறி உள்ளது ரசிகர்களை ஒரு பக்கம் அதிர்ச்சியடைய செய்தாலும், இவர் மீண்டும் நடிக்க வருவதே மிகப்பெரிய சந்தோசம் என, அனைத்து தரப்பு ரசிகர்களும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வரவேற்று வருகிறார்கள்.
