Selling Liquor: திண்டிவனத்தில் கள்ளச்சந்தையில் மது விற்ற தமிழக வெற்றிக் கழக நிர்வாகி மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 72 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தமிழகம் முழுவதும் நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனால் பல்வேறு தரப்பினர் திண்டிவனத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில் திண்டிவனம் செஞ்சி பேருந்து நிலையம் அருகே திண்டிவனம் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது தமிழ்நாடு டாஸ்மாக் மதுபாட்டிலை ஒருவர் விற்பனை செய்து கொண்டிருந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை பிடிக்க முயன்ற போது அவர் அங்கிருந்து தப்பி ஓடினார். விடாமல் அவரை விரட்டி சென்று போலீசார் பிடித்து காவல்நிலையம் அழைத்து சென்று அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில் திண்டிவனம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது. இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் திண்டிவனம் நகர பொறுப்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவரிடம் இருந்து 14,000 ரூபாய் மதிப்பிலான 72 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்து மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். தமிழக வெற்றிக்கழகத்தின் நிர்வாகி கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் ஊர் திரும்பிய மூதாட்டிக்கு உதவி செய்வது போல் நடித்து லிப்ட் கொடுத்த தவெக நிர்வாகி, ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் 3 சவரன் தங்க நகையை பறித்துச் சென்றது தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த கௌதம் (30) என்பது தெரியவந்ததை அடுத்து கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
