சூர்யாவின் Jai Bhim படம் சமூகத்தில் பெரும் மாற்றத்தையே உருவாக்கிவிட்டது.. நெகிழும் இயக்குநர் அமீர்.!
அதிமுக ஆட்சி நடந்தபோது, கலைஞர் கருணாநிதி சிறையில் வைக்கப்பட்டிருந்தார். அப்போது, அவர் வசனத்தில் கலைஞரின் ’நெஞ்சுக்கு நீதி’ என்ற திரைப்படத்தை இயக்கியவர். அதுபோலவே பல புரட்சிகரமான படங்களையும் கொடுத்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர்.
ஜெய்பீம் திரைப்படம் சமூகத்தில் பெரும் மாற்றத்தையே உருவாக்கியுள்ளது என்று இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் 'நான் கடவுள் இல்லை' என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் அமீர் கலந்துகொண்டு பேசுகையில், “இந்தியாவைப் பொறுத்தவரை யாரும் எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றலாம். விரும்பிய மதத்தை பின்பற்றலாம். விரும்பிய மதத்துக்காகப் பிரச்சாரம் செய்யலாம். அதற்கான உரிமையை இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ளது. இன்று பிரதமர் பேசுவதை கோயில்களில் ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள். அந்த காலக்கட்டத்தில் நாம் இருக்கிறோம்.
எனவே, நல்ல விஷயங்கள் எந்த மதத்தில் இருந்தாலும் சரி, எந்த சமூகத்தில் இருந்தாலும் சரி, எந்த மொழியில் இருந்தாலும் சரி, அதை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு நாம் யாருக்கும் பயப்பட தேவையில்லை. இன்றைய இளைஞர்களுக்கு எஸ்.ஏ.சந்திரசேகரை நடிகர் விஜய்யின் தந்தையாக மட்டுமே தெரியும். ஆனால், எம்.ஜி.ஆர், ரஜினி, கமல் ஆகியோர் போல எஸ்ஏசி என்ற மூன்று எழுத்தும் தமிழ் சினிமாவில் முக்கியத்துவம் பெற்றது. அதுமட்டுமல்ல, அதிமுக ஆட்சி நடந்தபோது, கலைஞர் கருணாநிதி சிறையில் வைக்கப்பட்டிருந்தார். அப்போது, அவர் வசனத்தில் கலைஞரின் ’நெஞ்சுக்கு நீதி’ என்ற திரைப்படத்தை இயக்கியவர். அதுபோலவே பல புரட்சிகரமான படங்களையும் கொடுத்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர்.
சினிமாவில் நடைபெறும் கதாநாயகிகள் நல்ல நடிப்பை வெளிப்படுத்த வேண்டும். இன்று பல கதாநாயகிகள் 2 படங்களில் நடித்தவுடன் உச்ச நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அப்படி நினைப்பதை அவர்கள் கைவிட வேண்டும். நடிகை நயன்தாரா பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். என்றாலும் அறம், மூக்குத்தி அம்மன் போன்ற திரைப்படங்கள்தான் அவருக்கு பெயரை பெற்றுத் தந்தன. எனவே, நடிகைகள் நடிப்புக்கு முக்கியத்துவம் தர வேண்டும். அதற்குரிய கதைகளை தேர்வு செய்து நடிக்க வேண்டும்.
ஓ.டி.டிவியில் வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்களிடம் மிக எளிதில் சென்றடைகிறது. அதற்கு, உதாரணம்தான் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம். இந்தத் திரைப்படம் சமூகத்தில் பெரும் மாற்றத்தையே உருவாக்கியுள்ளது” என்று அமீர் பேசினார்.