மீண்டும் சுந்தர்.சி - விஷால் காம்போ...ஷூட்டிங் துவங்குவதற்கு முன்பே இத்தனை ட்விஸ்டா?
மத கஜ ராஜா படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து நான்காவது முறையாக மீண்டும் இணைய சுந்தர்.சியும் விஷாலும் முடிவு செய்திருக்கிறார்கள். படத்தின் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே இந்த படம் பற்றிய பல சுவாரஸ்ய தகவல்கள் வெளியாக துவங்கி விட்டன. இதனால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எகிற துவங்கி உள்ளது.

சென்னை : மத கத ராஜா படம், லேட்டா வந்தா கூட லேட்டஸ்டா வந்து, ரசிகர்களை கவர்ந்துள்ளது. வசூலையும் குவித்து வருவதால் அதே சூட்டோடு அடுத்த படத்திற்கு ஒப்பந்தம் போட்டுள்ளனர் டைரக்டர் சுந்தர்.சி.,யும், விஷாலும். டைரக்டர் சுந்தர்.சி - விஷால் கூட்டணி ஆம்பள, ஆக்ஷன், மத கஜ ராஜா ஆகிய மூன்று மெகா காமெடி படங்களை கொடுத்துள்ளது. இந்த மூன்று படங்களுமே காமெடியில் கலக்கி, மக்கள் மனதில் அழுத்தமான இடத்தை பிடித்து விட்டன. அதிலும் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், சந்தானம் உள்ளிட்டோர் நடித்த மத கஜ ராஜா படம் 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு பொங்கலுக்கு தான் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு முழு நீள காமெடி படம் வந்துள்ளதால் சினிமா ரசிகர்களின் அமோக ஆதரவு இந்த படத்திற்கு கிடைத்துள்ளது. 12 ஆண்டுகள் கழித்து படம் ரிலீசானால் கூட ரூ.50 கோடியை வசூல் செய்துள்ளது. தொடர்ந்து தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நீண்ட இடைவேளைக்கு பிறகு விஷாலுக்கு இந்த படம் மிகப் பெரிய கம் பேக்காக அமைந்துள்ளது. இந்த வாய்ப்பை அப்படியே தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என டைரக்டர் சுந்தர்.சி முடிவு செய்துள்ளார்.
மத கஜ ராஜா படத்தின் வெற்றியை தொடர்ந்து சுந்தர்.சி - விஷால் கூட்டணி நான்காவது முறையாக மீண்டும் புதிய படம் ஒன்றில் இணைய முடிவு திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தின் பட்ஜெட்டே ரூ.100 கோடியாம். இதில் விஷலின் சம்பளம் மட்டும் ரூ.30 கோடியாம். விஷால் பற்றி பல விதமான வதந்திகள் சோஷியல் மீடியாவில் பரவி வரும் நிலையில், இந்த படம் நிச்சயம் அவருக்கு சினிமாவில் மிகப் பெரிய பிரேக் மற்றும் ரீஎன்ட்ரி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2018ம் ஆண்டு வெளியான சண்டைக்கோழி 2 படத்திற்கு பிறகு விஷால் நடித்த படங்கள் எதுவும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ஓடவில்லை என்பது முக்கியமானது.
சுந்தர்.சி இயக்க உள்ள இந்த புதிய படமும் காமெடி படம் தானாம். இதில் காமெடி ரோலில் நடிப்பதற்காக நடிகர் சந்தானத்திடம் பேசப்பட்டு வருகிறதாம். சந்தானம், ஹீரோவாக நடிக்க துவங்கிய பிறகு மற்ற ஹீரோக்களின் படங்களில் காமெடி ரோல்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார். இவர் சமீப காலத்தில் நடித்த படங்கள் எதுவும் பெரிதாக பேசப்படவில்லை. கடைசியாக 2024ல் "இங்க நாங் தான் கிங்கு" படத்தில் சந்தானம் நடித்தார். அதற்கு பிறகு தற்போது வரை அவருக்கு புதிய பட வாய்ப்புக்கள் எதுவும் இல்லை. தற்போதுள்ள நிலையில் அவர் சுந்தர்.சி படத்திற்கு ஓகே சொல்லுவாரா? என்பது தெரியவில்லை.
ஒருவேளை சுந்தர்.சி படத்தில் நடிக்க சந்தானம் மறுத்து விட்டால், அவருக்கு பதில் காமெடி ரோலில் வடிவேலுவை நடிக்க முடிவு செய்திருக்கிறார்களாம். அவினி சினிமேக்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்தின் ஷூட்டிங் பிப்ரவரி மாத இறுதியில் துவங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வடிவேலு ஏற்கனவே தற்போது சுந்தர்.சி இயக்கி முடித்துள்ள கேங்ஸ் படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தின் வேலைகளுடன், விஷால் நடிக்கும் புதிய படத்தின் வேலைகளையும் கவனித்துக் கொள்ள சுந்தர்.சி முடிவு செய்திருக்கிறாராம். ஹீரோயின் உள்ளிட்ட பிற குழுவினர் முடிவு செய்யப்பட்டதும் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.