துபாயில் இருந்து கொண்டு வரப்பட்டது ஸ்ரீதேவியின் உடல்…. சோகத்தில் மூழ்கிய மும்பை !!
துபாயில் உயிரிழந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் நீண்ட இழுபறிக்குப் பின் நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து தனி விமானம் மூலம் ஸ்ரீதேவியின் உடல் நேற்று இரவு 9.30 மணிக்கு மும்பை கொண்டுவரப்பட்டது. இன்று அரவது இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன. ஸ்ரீதேவியின் மரணத்தால் மும்பை நகரமே சோகத்தில் மூழ்கிக்கிடக்கின்றன.
நடிகை ஸ்ரீதேவி, , துபாயில் நடைபெற்ற , உறவினர் திருமணத்தில் பங்கேற்பதற்காக சென்று இருந்தார். திருமணம் முடிந்ததும், அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த அவர், 24ம் தேதி இரவு, மாரடைப்பால் உயிரிழந்ததாக, தகவல் வெளியானது.
இதையடுத்து, அவரது உடல், துபாயில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவர் மாரடைப்பால் இறக்கவில்லை என்றும், ஓட்டலின் பாத்ரூமில் உள்ள குளியல் தொட்டியில் மூழ்கி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், அவர், அளவுக்கு அதிகமாக மது குடித்திருந்ததாகவும், அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால், ஸ்ரீதேவியின் மரணத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. அவரது உடலை, மும்பை எடுத்து வருவதிலும் தாமதம் ஏற்பட்டது.
ஸ்ரீதேவி மரணத்தில், பல சந்தேகங்கள் இருப்பதாக, துபாய் அரசு வழக்கறிஞர் கூறியதால், பரபரப்பு ஏற்பட்டது.இதையடுத்து, ஸ்ரீதேவியின் மரணம் குறித்து, பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டன.அவரது கணவர், போனி கபூரிடமும், உறவினர்களிடமும், துபாய் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், நேற்றும் விசாரணை தொடர்ந்தது. பின், ஸ்ரீதேவியின் மரணத்தில் எந்தவித சந்தேகமும் இல்லை என்றும், வழக்கின் விசாரணை முடிக்கப்பட்டு விட்டதாகவும், அரசு வழக்கறிஞர் தெரிவித்ததை அடுத்து, சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இதன்பின், நேற்று மாலை, ஸ்ரீதேவியின் உடல், அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதன்பின், 'எம்பாமிங்' எனப்படும், உடல் அழுகாமல் இருப்பதற்கான, பதப்படுத்தும் பணி முடிந்து, தனி விமானம் மூலம், இரவில் மும்பை எடுத்து வரப்பட்டது. மும்பையில், ஸ்ரீதேவியின் வீடு அருகே உள்ள செலப்ரேஷன் ஸ்போர்ட்ஸ் கிளப் வளாகத்தில் இன்று காலை, 9:30 மணி முதல், பகல், 12:30 மணி வரை, அவரது உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.
அதன்பின், மாலை, 3:30 மணிக்கு, விலே பார்லேயில் உள்ள மின் மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படுகிறது. ஸ்ரீதேவி உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, பிரபல நடிகர்களும், பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்துள்ள ரசிகர்களும், மும்பையில் குவிந்து உள்ளனர்.