Sreesanth in Tamil cinema : கோலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் ஸ்ரீசாந்த்.. முதல் படமே நயன்தாரா கூட நடிக்கிறாராம்
இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ள கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் (Sreesanth), தற்போது நயன்தாரா படம் மூலம் கோலிவுட்டிலும் அறிமுகமாக உள்ளார்.
இயக்குனர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்குபவர் விக்னேஷ் சிவன். சிம்பு, விஜய் சேதுபதி, சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் பணியாற்றியதன் மூலம் பிரபலமான இவர், தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாராவை காதலித்து வருகிறார்.
சுமார் 6 வருடங்களுக்கு மேலாக காதலித்து வரும் இவர்கள், தற்போது ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இப்படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாராவும், சமந்தாவும் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தை லலித் குமாரின் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனமும், விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் காதலர் தினத்தையொட்டி வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.
இப்படம் குறித்து பல்வேறு சுவாரஸ்ய தகவல்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் தற்போது மேலும் ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். ஏற்கனவே இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ள அவர் இப்படம் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.