பிரபல இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் படம் 'தம்பி'. இந்தப் படத்துக்கு, '96' புகழ் கோவிந்த் வத்சவா இசையமைத்துள்ளார். 

வரும் டிசம்பர் 20ம் தேதி ரிலீசாகவுள்ள 'தம்பி' படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் நடைபெற்றது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதில் பங்கேற்று பேசிய கார்த்தி, "இரண்டு வருட உழைப்பு இந்தப்படத்துக்கு பின்னாடி இருக்கிறது. முதலில் ஒன்லைன், பின்னர் ஸ்கிரிப்ட் என ஒவ்வொன்றாக சேர்த்து இந்தப்படத்தை உருவாக்க இரண்டு வருடம் ஆகிவிட்டது" என தம்பி ஆரம்பமான கதையை நினைவு கூர்ந்தார். 

தொடர்ந்து பேசிய அவர், "சத்யாராஜ் மாமா இல்லாட்டி இந்தப்படமே வேண்டாம் என்று சொன்னேன். அவ்வளவு முக்கியமான கேரக்டர். சினிமாவில் ஒழுக்கம் என்பதை அவர்கிட்ட கத்துக்கிட்டேன். இன்று வரை மாமாவிடமிருந்துதான் அனைத்தையும் கற்றுவருகிறேன்" என நடிகர் சத்யராஜை மாமா.. மாமா... என பாசமாக அழைத்து, சிறுவயது முதல் அவருடனான உறவை நினைவுகூர்ந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

கார்த்தி பேசிய பின்னர் மேடையேறிய சூர்யாவும், சத்யராஜை மாமா.. மாமா என்று கூறி பாசமழை பொழிந்தார். விழாவில் சூர்யா பேசியதாவது, "இது ஒரு நெருக்கமான படம். எங்கள் வீட்டில் மூத்தவர் என்றால் ராஜ் மாமா தான். ராஜ் மாமா, கார்த்தி, ஜோ, சூரஜ் ஆகியோர் சேர்ந்த படம் இது" என தெரிவித்தார்.

அண்ணன், தம்பி இருவரும் சகநடிகர் சத்யராஜை மாமா.. மாமா... என அழைத்து உருகுவதற்கு காரணம், சிவக்குமார் - சத்யராஜுக்கும் இடையிலான 40 ஆண்டுகால நட்புறவுதான். அதனால்தான், தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே சத்யராஜை நினைத்து இன்றளவும் அன்பு மழை பொழிந்து வருகின்றனர் 

சிவக்குமாரின் மகன்கள். சத்யராஜுக்கும் சிவக்குமாரின் குடும்பத்துக்கும் உள்ள உறவைப் பார்த்து விழாவிற்கு வந்திருந்த அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கினர். 


மிகவும் சுவாரஸ்யமாக நடைபெற்ற தம்பி இசை வெளியீட்டு விழாவில், நடிகர்கள் சிவக்குமார், சத்யராஜ், நடிகைகள் ஜோதிகா, நிகிலா விமல், இயக்குநர் ஜீத்து ஜோசப், இசையமைப்பாளர் கோவிந்த் வத்சவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.