தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன், மாநாடு படத்தை ரசிகர்களுடன் பார்த்த அனுபவம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இப்படம் கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொடங்கியது முதல் பல்வேறு பிரச்சனைகளையும், தடைகளையும் சந்தித்து வந்த இப்படம் ரிலீஸ் சமயத்தில் எதிர்கொண்ட பிரச்சனை ஏராளம். 

அத்தனை தடைகளையும் தாண்டி வெளியான இப்படம் தற்போது தமிழகமெங்கும் வசூல் வேட்டை ஆடி வருகிறது. முதல் இரண்டு நாட்களிலேயே இப்படம் 14 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மாநாடு படத்தை சிம்பு ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் கொண்டாடி வருகின்றனர். 

நேற்று படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், வெங்கட் பிரபு, சிம்பு, எஸ்.ஜே.சூர்யா உள்பட படக்குழுவினரை தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் மாநாடு படத்தை ரசிகர்களுடன் பார்த்த அனுபவம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அவர் பதிவில் அவர் கூறியுள்ளதாவது: “மாநாடு படத்தை முழுவதுமாக என்ஜாய் செய்து பார்த்தேன். படக்குழுவினர் அனைவரும் சிறப்பான பங்களிப்பை கொடுத்து படத்தை விறுவிறுப்பாக உருவாக்கி உள்ளனர்.

வெங்கட் பிரபு தனது திறமையான இயக்கத்தால் படத்தை நேர்த்தியாக கொடுத்துள்ளார். சிம்பு சூப்பராக நடித்துள்ளார். எஸ்.ஜே.சூர்யா சார் நீங்க தெறிச்சிட்டீங்க. யுவனின் இசை வேறலெவல். படக்குழுவினர் அனைவருக்கு பாராட்டுக்கள். இந்த வெற்றி தொடரட்டும்” என பதிவிட்டுள்ளார். 

Scroll to load tweet…