நடிகர் சங்கத்தில் இருந்து திடீரென நீக்கப்பட்ட பாக்யராஜ்... டுவிட்டரில் ஆதங்கத்தை வெளிப்படுத்திய சாந்தனு
நடிகர் சங்கத்தில் இருந்து பாக்யராஜ் நீக்கப்பட்டுள்ளது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், அவரது மகன் சாந்தனு டுவிட்டரில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது. இதில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிட்டன. இதில் பதிவான வாக்குகள் கடந்த 3 ஆண்டுகளாக எண்ணப்படாமல் இருந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
இதில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியினர் அமோக வெற்றி பெற்று பெரும்பாலான பதவிகளை கைப்பற்றினர். அதன்படி தலைவராக நாசரும், பொருளாளராக கார்த்தியும், பொதுச்செயலாளராக விஷாலும் உள்ளனர். இதனிடையே நடிகர் சங்க நிர்வாகிகளின் நன்மதிப்பை கெடுக்கும் வகையில் செயல்பட்டதாக பாக்யராஜ் மீது புகார் கூறப்பட்டது.
இதையும் படியுங்கள்... அடுத்த படத்தில் சோழ மன்னராக அவதாரம் எடுக்க உள்ள தனுஷ்... பொன்னியின் செல்வன் நடிகர் வெளியிட்ட சர்ப்ரைஸ் அப்டேட்
இதுகுறித்து செயற்குழு கூடி, சங்க உறுப்பினர் பதவியில் இருந்து ஏன் உங்களை நீக்கக்கூடாது என்றும், இதற்காக 15 நாட்களுக்குள் விளக்கமளிக்குமாறும் பாக்யராஜுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதேபோல் நடிகர் உதயாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்த நிலையில், தற்போது பாக்யராஜும், உதயாவும் நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் ஆத்திரமடைந்த நடிகர் பாக்யராஜின் மகன் சாந்தனு, டுவிட்டரில், ‘எவ்வளவு கீழ இறங்க முடியுமோ அவ்வளவு இறங்கி பாக்குறீங்க … திருத்த முடியாது' என ஒரு பதிவை போட்டிருந்தார். பாக்யராஜை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கிய நாசர், கார்த்தி, விஷால் ஆகியோர் மீதுள்ள கோபத்தில் தான் அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... தூக்கில் தொங்கியபடி பிணமாக மீட்கப்பட்ட தமிழ் பட நடிகை... தற்கொலை செய்யும் முன் எழுதிய கடிதமும் சிக்கியது