சென்னையில் உள்ள தி-நகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நடிகர் சரத்பாபுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏராளமான ரசிகர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

நடிகர் சரத்பாபு தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஏராளமான பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்தார். கடந்த சில மாதங்களாக செப்சிஸ் என்கிற அரியவகை நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நடிகர் சரத்பாபு, அதற்காக சிகிச்சையும் எடுத்து வந்தார். அந்த நோய் பாதிப்பால் அவரின் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழக்க தொடங்கியதால், அவர் ஐசியு-வில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் வெண்டிலேட்டர் உதவியுடன் ஒரு மாதத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த நடிகர் சரத்பாபு நேற்று மதியம் 1.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 71. சரத்பாபுவின் மறைவு தென்னிந்திய திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. நேற்று மாலை ஐதராபாத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு ஏராளமான தெலுங்கு நடிகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இதையும் படியுங்கள்... சரத்பாபுவிற்கு இப்படி ஒரு கடைசி ஆசை இருந்ததா? அடடா... கடைசிவரை நிறைவேறாமலே போயிருச்சே!

இதையடுத்து இன்று காலை ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்ட நடிகர் சரத்பாபுவின் உடல், தி-நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. இன்று காலை முதலே சுஹாசினி, ராதிகா, சரத்குமார், ஒய்.ஜி.மகேந்திரன், இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா, நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் நேரில் வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், சரத்பாபுவின் உடல் இன்று மதியம் 2 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கிண்டியில் உள்ள தொழிற்பேட்டை அருகே உள்ள மின் மயானத்தில் தான் நடிகர் சரத்பாபுவின் உடல் தகனம் செய்யப்பட உள்ளதாம். அவருக்கு வாரிசு இல்லாததால் குடும்பத்தினர் தான் இறுதிச்சடங்குகளை செய்வார்கள் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... என்ன ரொம்ப நாள் வாழ சொல்லிட்டு, சரத்பாபு சீக்கிரமா போயிட்டாரு - அஞ்சலி செலுத்திய பின் ரஜினி உருக்கம்