santhanam problem

சென்னையில் கொடுக்கல் வாங்கல் தகராறில் தொழிலதிபர் மற்றும் பாஜக வழக்கறிஞர் ஆகியோரை தாக்கிய வழக்கில் நடிகர் சந்தானத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் தலைமறைவாகியுள்ளார். அவரை பிடிக்க தனிப் படை அமைக்கப்பட்டுள்ளது..

என்றென்றும் புன்னகை, உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் நடிகர் சந்தானம். தற்போது அவர் பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

சந்தானம், வளசரவாக்கத்தில் உள்ள இன்னோவேட்டிவ் கன்ஸ்ட்ரக்சன் கம்பெனியுடன் சேர்ந்து குன்றத்தூர் அருகே திருமண மண்டபம் கட்டுவதற்காக அந்நிறுவத்தைச் சேர்ந்த சண்முக சுந்தரம் என்பவரிடம் 3 கோடி ரூபாய் முன்பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

பணத்தை பெற்றுக்கொண்ட சண்முகசுந்தரம் 3 ஆணடுகளாக மண்டபத்தை கட்டிக்கொடுக்காமல் இழுத்தடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே போடப்பட்ட ஒப்பந்தம் கேன்சல் செய்யப்பட்டது.

சந்தானம் கொடுத்த 3 கோடி ரூபாயில் சில லட்சங்களை பாக்கி வைத்த சண்முக சுந்தரம் பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக திருப்பி அளித்துள்ளார்.

மீதி பணத்தை கேட்டு நேற்று வளசரவாக்கத்தில் உள்ள இன்னோவேட்டிவ் நிறுவனத்துக்கு சென்ற நடிகர் சந்தானத்துக்கும் அங்கிருந்த சண்முக சுந்தரம் மற்றும் அவரது நண்பர் வழக்கறிஞர் பிரேம் ஆனந்துக்கும் இடையே ஏற்பட்ட வாய்த் தகறாறு முற்றி கைகலப்பாக மாறியது.

அவர்கள் நடுத் தெருவுக்கு வந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

இதில் பிரேம் ஆனந்துக்கு மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. அவர் சிகிச்சைக்காக விஜயா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சந்தானத்துக்கும் காயம் ஏற்பட்டதால் அவர் சூர்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து இரு தரப்பினர் சார்பிலும் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் சந்தானம் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதனால் சந்தானம் மற்றும் அவரது உதவியாளர்கள் உள்ளிட்ட 4 பேர் சூர்யா மருத்துமனையில் இருந்து தப்பி தற்போது தலைமறைவாக உள்ளனர். நடிகர் சந்தானத்தை கைத செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் நடிகர் சந்தானத்தைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.