மோசடி வழக்கில் சிக்கிய ஆர்.கே. சுரேஷ்..!
விநியோகஸ்தர், தயாரிப்பாளர், நடிகர் என, படிப்படியாக திரைத்துறையில் கால் பதித்து தற்போது ஓரிரு படங்களில் ஹீரோவாக நடித்துக்கொண்டிருப்பவர் ஆர்.கே.சுரேஷ்.
இவர் படங்களில் நடித்து வந்தாலும், படங்கள் தயாரிப்பிலும் முழு கவனம் செலுத்தி வருகிறார். மேலும் கடந்த ஆண்டு இவர் தயாரிப்பில் வெளிவந்த 'தர்மதுரை' திரைப்படம் 100 நாட்களைக் கடந்து ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இவர் மீது 'கோடைமழை' படத்தின் தயாரிப்பாளர் அலெக்சாண்டர் என்பவர் தயாரிப்பாளர் சங்கத்தில் மோசடி புகார் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கொடுத்துள்ள புகாரில், யாழ் தமிழ்த் திரை சார்பாக, நண்பர்களுடன் இணைந்து 'கோடைமழை' என்கிற படத்தை தயாரித்தேன். திரைப்படத் துறை பற்றியும் அதன் வியாபாரம் பற்றியும் அதிகம் தெரியாததால், படத்தை வெறும் 27 திரையரங்கத்தில் மட்டுமே வெளியிட முடிந்தது.
இந்த நிலையில் எங்களுடைய படத்தை பார்த்த ஆர்.கே.சுரேஷ் படம் நன்றாக உள்ளது. படத்தை மறுவெளீயீடு செய்யலாம் என கூறி அதற்கு 40 லட்சம் வரை செலவாகும் என்றும், அப்படி கொடுத்தால் படத்தை 90 திரையரங்கத்தில் வெளியிடுவதாகவும் தெரிவித்தார்.
அதனை நம்பி முன்பணமாக அவரிடம் 25 லட்சம் கொடுத்ததாகவும், ஆனால் அவர் சொன்னபடி 90 திரையரங்கங்களில் படத்தை வெளியிடாமல், வெறும் 11 திரையரங்கங்களில் மட்டுமே வெளியிட்டார். மேலும் வரவு செலவு என எந்த கணக்கையும் காட்டாமல் , 11 லட்சம் காசோலையாக கொடுத்தார். அந்த காசோலை பவுன்ஸ் ஆகிவிட்டது எனக் கூறி ஆர்.கே.சுரேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார் அலெக்சாண்டர் .