திருநங்கை வாய்ப்பு தேடும் ரமேஷ் திலக்...ஏன் தெரியமா?
மங்காத்தா படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்த ஆர்.ஜே.ரமேஷ் திலக் தற்போது பல படங்களில் காமெடியனாகவும், குணச்சித்திர வேடத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர், தான் நடிக்க விரும்பும், கதாபாத்திரம் குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இவர் நடிக்க விரும்பும் கதாபாத்திரத்தில் ஒரு சில நடிகர்கள் நடித்திருந்தாலும் நடிப்பால் நெஞ்சில் நின்றவர்கள் சிலர் தான். அப்படி என்ன கதாபாத்திரத்தில் இவர் நடிக்க விரும்புகிறார் தெரியுமா? திருநங்கை வேடத்தில் தான்! ஏன் இந்த வேடத்தில் இவர் நடிக்க விரும்புகிறார் என்பதை இவர் கூறியது சற்று சிந்திக்கத்தான் வைக்கிறது.
இவருக்கு நன்கு தெரிந்த திருநங்கைகள் சிலர் உள்ளார்களாம். அவர்கள் அனைவரும் தங்களை மூன்றாம் பாலினம் என அரசு அங்கீகரித்தாலும், வேற்று கிரக வாசிகள் போல் பார்ப்பவர்களும் தங்களை அசிங்கமாகப் பார்ப்பவர்களும் பலர் உள்ளனர் என்று இவரிடம் கூறி வேதனைப்பட்டுள்ளனராம்.
இதனால் இவருக்கு திருநங்கைகளுடைய உரிமைகளையும், அவர்களும் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள்தான் என எடுத்துக்கூறும் படியான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை உள்ளதாம். அதனால் தற்போது திருநங்கையாக நடிக்க வாய்ப்புகள் தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போது இவருடைய நெருங்கிய நண்பரான விஜய்சேதுபதி, 'திருநங்கை' வேடமிட்டு ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.